பவுலர்களுக்கு சாதகமாக கிரிக்கெட்டில் பல விதிமுறைகள் மாற்றம்: ஜூலை 5 முதல் அமல்
பார்படோஸ்: பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் தற்போதுள்ள ஒருநாள், கிரிக்கெட் விதிமுறைகள் சிலவற்றில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றம் கொண்டுவந்துள்ளது. புதிய விதிமுறைகள், ஜூலை மாதம் 5ம் தேதிமுதல் அமலுக்கு வரும்.
ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக மாறிக்கொண்டே வருகிறது. இதனால், ஒரு அணி 400 ரன்களுக்கு மேல் எடுப்பது கூட சர்வ சாதாரணமாகிவிட்டது.

பரிதாப பவுலர்கள்
பவுலர்கள் பரிதாபமான ஜீவன்கள் போல மைதானத்தில் காணப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, அனில்கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கடந்த மாதம், ஒரு பரிந்துரையை அளித்திருந்தது.

ஃபீல்டர்கள் எண்ணிக்கை
வெஸ்ட்இண்டீசின் பார்படோசில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆண்டு கூட்டத்தில், இந்த பரிந்துரை பற்றி விவாதிக்கப்பட்டு, விதிமுறை மாற்றங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. 41 முதல் 50 ஓவர்கள் வரையிலான காலகட்டத்தில், தற்போது 4 ஃபீல்டர்களுக்கு மட்டுமே எல்லைக்கோட்டு அருகே நிற்க அனுமதியுள்ளது. அது இனிமேல் 5 வீரர்களாக உயர்த்தப்படும்.

பேட்டிங் பவர்பிளே
பேட்டிங் பவர்பிளே என்ற பெயரில் பேட்டிங் செய்யும் அணி தேர்ந்தெடுக்கும் 5 ஓவர்கள் கட் செய்யப்படும். இனிமேல் கட்டாய பேட்டிங் பவர்பிளே ஓவர்கள் மட்டுமே உண்டு. பேட்ஸ்மேன்கள் விரும்பும் நேரத்தில் அதை தேர்ந்தெடுக்க முடியாது.

ஃப்ரீ ஹிட்
தற்போது கிரீசுக்கு வெளியே கால் வைத்து போடப்படும் நோ-பால் பந்துகளுக்குதான் ஃப்ரீ ஹிட் தரப்படுகிறது. இனிமேல், அனைத்து வகை நோ-பால் பந்து வீச்சுக்கும் ஃப்ரீஹிட் உண்டு. இந்த விதிமுறை ஒருநாள் கிரிக்கெட் மட்டுமின்றி டி20 வகை போட்டிகளுக்கும் அமலாக்கப்படும்.


Click it and Unblock the Notifications