டெல்லி: இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்துள்ள 14 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணிகள் பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளன. முதல் 10 ஆட்டங்களில் 9 ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே வென்றன. அதற்குள், வெற்றிக்கான டிரெண்ட் மாறியுள்ளது. கடைசியாக நடந்த நான்கு ஆட்டங்களிலும் முதலில் ஆடிய அணிகளே வென்றுள்ளன.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 51 நாட்களில் 60 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் சொந்த மண்ணில் ஒருமுறையும், எதிரணியின் சொந்த மண்ணில் ஒருமுறையும் விளையாடுகின்றன.
இந்த சீசன் துவங்கி 10 நாட்களில், இதுவரை 14 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதுவரை நடந்துள்ள அனைத்து ஆட்டங்களிலும் டாஸ் வென்ற அணி, பவுலிங்கையே தேர்வு செய்தன. முதல் 10 ஆட்டங்களில், 9 ஆட்டங்களில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே வென்றன. டாஸ் ராசியாக இருக்கும் என்றும் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், கடைசியாக நடந்துள்ள நான்கு ஆட்டங்களிலும் டாஸ் வென்ற அணிகள், பவுலிங்கையே தேர்ந்தெடுத்தன. ஆனால், முதலில் பேட்டிங் செய்த அணிகளே இந்த ஆட்டங்களில் வென்றுள்ளன. இந்த ஐபிஎல் சீசனில் வெற்றிக்கான மந்திரம் டிரெண்ட் மாறி மாறி வந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை, இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்குதான் சாதகமாக இருக்கும். அதாவது இலக்கு தெரியும் என்பதால் அதற்கேற்ப அடித்து நொறுக்கலாம். ஐபிஎல் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்துள்ள அணிகள் 354 போட்டிகளில் வென்றுள்ளன. அதே நேரத்தில், 286 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளன. அதாவது முதலில் பவுலிங் தேர்வு செய்யும் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு 10 சதவீதம் அதிகமாக உள்ளது.
கடைசியாக நடந்த நான்கு ஆட்டங்களிலும் முதலில் விளையாடிய அணிகள், மிகப் பெரிய ஸ்கோரை எடுத்தன. அதனால், அவற்றுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியும் கணிக்க முடியாததாக இருப்பதால்தான், டி20 போட்டிகள், குறிப்பாக, ஐபிஎல் 10 சீசனையும் தாண்டி மக்களை ஈர்க்கிறது.