
இங்கிலாந்தை வீழ்த்தியது
இந்த தொடரில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி களம் கண்ட நியூசிலாந்து பலம் வாய்ந்த இந்தியாவை தோற்கடித்தது. தொடர்ந்து சிறு அணிகளை சாய்த்து வீறு நடை போட்ட நியூசி செமி பைனலில் யானை பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 166 என்ற சவாலான ஸ்கோரை நியூஸிக்கு நிர்ணயித்தது.

இதுதான் திருப்பு முனை
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன. தொடக்க வீரர் மிட்செல்லும், டெவோன் கான்வேவும் அணியை தூக்கி நிறுத்தினார்கள். டெவோன் கான்வே ஆட்டமிழந்தும் போட்டி இங்கிலாந்து பக்கம் செல்வதுபோல் இருந்தது. ஆனால் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நியூசி பக்கம் திருப்பினார். பிறகு அவர் ஆட்டமிழந்தாலும் நீஷம் ஆட்டமே மேட்சுக்கு திருப்பு முனையாகும்.

ஜேம்ஸ் நீஷமின் அமைதி
இறுதியில் மிட்செல் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தவுடன் பெவிலியனில் இருந்த நியூசிலாந்து வீரர்கள், பயிற்சியாளர், ஊழியர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். ஆனால் அங்கு அமர்ந்திருந்த ஜேம்ஸ் நீஷம் ஏதும் நடக்காதது போல் மிக அமைதியாக உட்கார்ந்தது இருந்தார். இது தொடர்பான புகைப்படம், வீடியோ வைரலானது. பலரும் இதனை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

விளக்கம் அளித்துள்ளார்
இந்த நிலையில் ஏன் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை? என்பதற்கு ஜேம்ஸ் நீஷம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ' நாங்கள் அரையிறுதியில்தான் வெற்றி பெற்றோம். மிக முக்கியமான பைனல் இனிமேல் தான் இருக்கிறது. நாங்கள் விளையாட்டின் மீது எங்கள் பார்வையை மிகவும் உறுதியாகப் பெற்றுள்ளோம். பொதுவாக அரையிறுதி வெற்றியின் மகிழ்ச்சியில் சிக்கிக் கொள்வது நியூசிலாந்தின் இயல்பில் இல்லை . இன்னும் சில நாட்களில் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பதே எங்களது இலக்காக உள்ளது என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











