கொல்கத்தா: உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் சூப்பர் 10 சுற்றில் இன்று நடந்த போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி அபாரமாக நான்காவது வெற்றி பெற்றது.
உலக கோப்பை டி20 போட்டியில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது நியூசிலாந்து. அந்த அணிக்கு துவக்கம் தந்த நிகோல்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி 42 ரன்கள் சேர்த்தார்.

முன்ரோ 35 ரன்களும், டெய்லர் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்தது. வங்கதேசம் தரப்பில் அசத்தலாக பந்துவீசிய இளம் வீரர் முஸ்தாபிஜுர் ரஹ்மான் 22 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்த இலக்கை எட்டுவதற்கு வங்கதேசம் கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆனால் நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாத வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தமிம் இக்பால் (3), மிதுன் (11), சபீர் ரஹ்மான் (12), சவுமியா சர்கார் (6), என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் வங்கதேச அணியால் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை. அந்த அணி 15.4 ஓவரில் ஆல் அவுட் ஆகி 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது.