இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருக்கிறது இதன் மூலம் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருக்கிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், தற்போது ஒரு நாள் தொடரையும் வென்றிருக்கிறது. அதுவும் இந்த அணியில் சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் விளையாடிய 6 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

முற்றிலும் இளம் வீரர்களை நம்பி களமிறங்கிய நியூசிலாந்து அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இது குறித்து போட்டிக்கு பிறகு பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வல், "இந்திய ரசிகர்களுக்கு முன்னால் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிறந்த அணியை எதிர்த்து இங்கு வந்து தொடரை வெல்வது நியூசிலாந்து அணிக்கு இதுவே முதல் முறை என்ற வகையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்திய மண்ணில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் இருந்தது."
"ஒரு குழுவாக, அணிக்கு எது சிறந்தது என்பதைப் பற்றிக்கொண்டு, வெளிநாட்டு சூழ்நிலைகளில் தங்களை சோதித்தது உண்மையிலேயே நல்ல விசயம். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் இணைந்து செயல்படும் ஒரு குழுவாகும். இதுவே எங்கள் வழியின் ஒரு பகுதி, ஏனெனில் உலக வரைப்படத்தில் கீழே உள்ள ஒரு சிறிய நாடாக இருந்தாலும், பெரிய நாடுகளை எதிர்கொள்ள ஒன்றாக வேலை செய்ய முயற்சிக்கிறோம்."
"டேரில் மிட்செல் கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் அற்புதம் படைத்துள்ளார். அவர் மிக அழகாக விளையாடி பேட்டிங் வரிசையை வழிநடத்தினார். அவர் மிகவும் பணிவான நபர் என்பதால், அவருக்குரிய அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.சர்வதேச கிரிக்கெட்டிற்கு புதிய வீரர்களை அறிமுகப்படுத்துவது எப்போதும் உற்சாகம் தரும். இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று அறிமுக வீரர்களைப் பெற்றது ஒரு சிறப்பான அம்சம்."
"இந்திய மைதானங்களில் திரண்ட கூட்டத்தின் முன் விளையாடிய அனுபவத்தைப் பெறுவது அற்புதமான ஒன்று. குறிப்பாக, அறிமுகமான அந்த மூன்று வீரர்களும் அணிக்காக சிறப்பாக செயல்பட்டது மிகவும் திருப்திகரமாக இருந்தது.நியூசிலாந்து கிரிக்கெட்டில் திறமையான இளம் வீரர்களின் வரிசையை வளர்ப்பது மிகப்பெரிய விஷயம். இது அணியின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.