மெல்போர்ன்: உலக கோப்பை பைனலில், சரியாக தவறுகளை செய்தது நியூசிலாந்து.
உலக கோப்பை பைனலில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய அதிருஷ்டம். ஆனால், அதை துரதிருஷ்டமாக மாற்றிவிட்டனர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். 6 முறை உலக கோப்பை அரை இறுதிக்கு வந்த நியூசிலாந்து, முதல் முறையாக பைனலுக்கு வந்தது. ஆனால் அந்த பதற்றமே அவர்கள் பேட்டிங்கை புரட்டி போட்டது.
நியூசிலாந்து பேட்டிங் முதுகெலும்பான மெக்கல்லம் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்தார். முதல் 10 ஓவர் பேட்டிங் பவர் பிளே எனப்படும். அதில் அதிக ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம். ஆனால், முதல் ஓவரிலேயே கேப்டன் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து.

அதன்பிறகு எலியட்-டைலர் ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தது. ஆனால், 35வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே வந்தபோது, அப்போதும் முதல் ஓவரிலேயே டைலரை இழந்தது. அதன்பிறகு அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் பெவிலியன் பேரேட் நடத்திவிட்டனர்.
ஆக.. பேட்டிங் செய்ய வேண்டிய பவர்பிளேக்களில்தான், சரியாக தப்பு செய்தது நியூசிலாந்து. இன்னும் சரியாக சொல்லப்போனால், கடைசி 33 ரன்களை எடுப்பதற்குள் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்தது.
1979 உலக கோப்பை பைனலில் இதைவிட மோசமாக பேட்டிங் செய்தது இங்கிலாந்து. அந்த அணி 11 ரன்களில் கடைசி 7 விக்கெட்டுகளை இழந்தது. அப்போட்டியில், இங்கிலாந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.