புலவாயோ: டெஸ்ட் கிரிக்கெட்டின் 95 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை காணாத ஒரு பிரம்மாண்ட சாதனையை நியூசிலாந்து அணி நிகழ்த்தியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் மூன்று வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் தலா 150 ரன்களுக்கு மேல் குவித்து, உலக கிரிக்கெட்டை திகைக்க வைத்துள்ளனர்.
டெவான் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் இளம் புயல் ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் ரன் வேட்டையால், ஜிம்பாப்வே அணி நிலைகுலைந்து போயுள்ளது. முதல் இன்னிங்ஸில் 600 ரன்களுக்கும் மேல் குவித்தது நியூசிலாந்து அணி.

புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ரன் மலையைக் குவித்தது. முதலில், இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் தவித்து வந்த தொடக்க வீரர் டெவான் கான்வே, தனது ஃபார்முக்கு திரும்பி 245 பந்துகளில் 153 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ஹென்றி நிக்கோல்ஸ் நிதானமாக ஆடி ஆட்டமிழக்காமல் 150* ரன்கள் எடுத்தார்.
ஆனால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராதான். களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டிய அவர், ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 104 பந்துகளில் சதத்தை எட்டிய ரவீந்திரா, அதன்பின் இன்னும் ஆக்ரோஷமாக விளையாடி 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 165* ரன்கள் குவித்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டி, 476 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு அணியின் மூன்று வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் 150+ ரன்கள் அடிப்பது இது மூன்றாவது முறை மட்டுமே.
“நீ மட்டும்தான் சிக்ஸ் அடிப்பியா?” காட்டடி அடித்த அனுஜ் ராவத்.. பிரியன்ஷ் ஆர்யா அடித்த செஞ்சுரி வீண்
முன்னதாக, ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் மேட் ஹென்றியின் அபார பந்துவீச்சில் (5 விக்கெட்டுகள்) வெறும் 125 ரன்களுக்கு சுருண்டது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து வீரர்களின் இந்த மாபெரும் ஆதிக்கத்தால், ஜிம்பாப்வே அணி படுதோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.