தரம்சலா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 போட்டியில் நியூஸிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. ஹிமாச்சல பிரதேசம் தரம்சலாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்டிலும் வில்லியம்சனும் வேகமாக ரன்களைக் குவித்தார்கள். அதிலும் கப்டில் அதிரடி காட்ட 3வது ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸர்களை விளாசினார். கப்டில் 39 ரன்களிலும் வில்லியம்சன் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். முன்ரோ (23), ஆண்டர்சன் (3), எலியட் (27), ரன்கள் எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் மேக்ஸ்வெல், பால்க்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நியூசிலாந்தை தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் ஓவர் முதலே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவாஜா (38), வாட்சன் (13) ரன்கள் எடுத்தனர். முதல் 5 ஓவர்களில் 42 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.
வாட்சன், கேப்டன் ஸ்மித் (6), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி தடுமாற தொடங்கியது. வார்னர் (6), மேக்ஸ்வெல் (22), அதிரடி காட்டிய மிட்சல் மார்ஷல் (24) ரன்கள் எடுத்தார். பால்க்னர் (2) அவட் ஆகி வெளியேறினார். நெவில் (7), ஜாம்பா (2) அவுட் ஆகாமல் இருந்தனர்.
கடைசி 5 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்களில் தோல்வியடைந்தது. 3 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து வீரர் மெக்லகன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
நியூசிலாந்து ஏற்கெனவே தனது முதல் போட்டியில் இந்தியாவை தோற்கடித்திருந்தது. ஆஸ்திரேலியாவை வென்றதன் மூலம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.