வெலிங்டன்: உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதுவரை உலக கோப்பை தொடர்களில் ஆடிய நியூசிலாந்து அணியிலேயே இதுதான் பெஸ்ட் என்று கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளில் 11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து இன்று, 15 பேர் கொண்ட, தனது அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அணி விவரம்: பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரி ஆன்டர்சன், டிரென்ட் பவுல்ட், கிரான்ட் எல்லியட், மார்ட்டின் குப்தில், டாம் லதாம், மிட்சேல் மெக்கிளனாகன், நேத்தன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னே, லூக் ரோன்சி, டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், டேனியல் வெட்டோரி, கேன் வில்லியம்சன்.

இதில் எல்லியட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகும். வேகப்பந்து வீச்சாளரான, டிரென்ட் பவுல்ட் இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர். ஆனால் சமீபத்தில் நிறைவுபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பவுல்ட் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இலங்கையை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்தார். எனவே அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வழங்கியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.
இதனிடையே, இதுவரை உலக கோப்பையை எதிர்கொண்ட நியூசிலாந்து அணிகளிலேயே, இந்த அணிதான் திறமையானது என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம்.