NZ vs AUS : நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி வெலிங்டன் நகரில் தற்போது தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார்கள். இதனால் இந்த ஜோடி எப்படி விளையாட போகிறது என்பதை எதிர்நோக்கி சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருந்தனர்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிஎஸ்கே வீரர்கள் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.
ஆஸ்திரேலிய வீரர்களும் கட்டுக்கோப்பாகவே பந்து வீச தொடங்கினார்கள். எனினும் சில பந்துகளை அவர்கள் லாவகமாக செயல்பட்டு ரன்களை சேர்த்தனர். குறிப்பாக கான்வே கடந்த சில போட்டிகளில் சொதப்பி வந்தார். இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் கொஞ்சம் கலக்கமடைந்து இருந்தார்கள். ஏனென்றால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு தொடக்க வீரராக கான்வே ஜொலிக்க வேண்டும். ருதுராஜ்- கான்வே செயல்பாடும் மிகவும் முக்கியமாகும்.
இந்த நிலையில் கான்வே இன்றைய ஆட்டத்தில் தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 63 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், இரண்டு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று சிஎஸ்கே அணி தற்போது தேர்வு செய்திருக்கும் ரச்சின் ரவீந்திரா பேட்டிங்கில் அதிரடி காட்டினார்.
குறிப்பாக அவர் ஆறு சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் 29 பந்துகளில் அவர் அரை சதம் கடந்தார். முதல் 16 பந்துகளை பிடித்த அவர் வெறும் 14 ரன்கள் தான் சேர்த்தார். ஆனால் அடுத்த 19 பந்துகளில் ரச்சின் ரவீந்திரா 54 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று கிளன் பிலிப்ஸ் 19 ரன்களும், மார்க் சாப்மேன் 18 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியும் அதிரடியாக விளையாடி தற்போது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. கடைசி பந்தில் டிம் டேவிட் பவுண்டரி அடித்து திரில் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பு சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பார்ம்க்கு திரும்பி இருப்பது இருத் தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.