டுனெடின் : நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஸீன் போட்டு அம்பயரிடம் மாட்டிக் கொண்டார். அதனால், பாகிஸ்தான் அணி ஒரு ரன்னை இழந்தது.
பாகிஸ்தான் அணி ஏற்கனவே, இந்த தொடரை இழந்து ஆறுதல் வெற்றிக்காக ஆடி வந்த நிலையில், இந்த வேண்டாத வேலை எல்லாம் தேவையா? என சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ரசிகர்களே ரிஸ்வானை விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன முகமது ரிஸ்வான், பாபர் அசாமுக்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்று இருக்கிறார். ஆனால், அவரது நடத்தை சற்று வித்தியாசமாக இருக்கும். 2023 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக நாடகம் ஆடினார். தான் வலியுடன் பேட்டிங் செய்வது போல பாவனை செய்தார். ஆனால், சிங்கிள் ரன் ஓடும் போது அவர் வலியே இல்லாமல் ஓடியதை பார்த்த பலரும், அவர் நாடகம் போடுவதை கண்டுபிடித்தனர்.

அதே போல, இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது வேண்டுமென்றே ஆடுகளத்துக்கு தாமதமாக வந்தார். தனக்காக அனைவரும் காத்திருக்க வேண்டும். அப்போது ஒரு பரபரப்பு எழும் தன்னை அனைவரும் கவனிப்பார்கள் என்றே அப்படி செய்தார். அதே போல, நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஒரு காரியம் செய்தார்.
நியூசிலாந்து அணி 224 ரன்கள் குவித்த நிலையில், எட்ட முடியாத இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஆடிக் கொண்டு இருந்த போது துவக்க வீரராக களமிறங்கிய ரிஸ்வான், பந்தை அடித்து விட்டு பேட்டை கீழே தவறவிட்டது போல விட்டுவிட்டு, வெறுங்கையுடன் சிங்கிள் ரன் எடுக்க மறுமுனைக்கு ஓடினார். அப்போது மீண்டும் ரன் எடுக்க ஓடி வர வேண்டும் என்பதால் முழுமையாக க்ரீஸுக்குள் செல்லாமல், கீழே குனிந்து கைவிரல்களை வைத்து கிரீஸை தொட முயன்றார். ஆனால், அவரது விரல் படவில்லை.
அவரது சேட்டையை உணர்ந்த அம்பயர் அவர் சரியாக க்ரீசை தொட்டாரா? இல்லையா? என ரீப்ளே செய்து பார்த்தார். அப்போது அவர் தொடவில்லை எனத் தெரிந்ததால் அந்த சிங்கிள் ரன் பாகிஸ்தான் அணிக்கு கிடைக்காமல் போனது. ஏற்கனவே, தோல்விமயமாக இருக்கும் பாகிஸ்தான் அணியில் இது போன்ற குரளி வித்தைகள் எல்லாம் தேவையா என பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் ரிஸ்வான் 24 ரன்கள் மட்டும் எடுத்தார். பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாபர் அசாம் 58 ரன்கள் அடித்தும் அவரால் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்க முடியவில்லை. 16வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.