ஆக்லாந்து : பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஆடிய முதல் போட்டியிலேயே சரியான அடி வாங்கி இருக்கிறார் ஷஹீன் ஷா அப்ரிடி. பாகிஸ்தான் அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி சமீபத்தில் தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார்.
ஷஹீன் கேப்டன் ஆன பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடியது பாகிஸ்தான் அணி. அந்த முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்தது அந்த அணி. கேப்டனாக தனது முதல் தோல்வியை சந்தித்ததோடு, தனிப்பட்ட முறையில் பவுலிங்கிலும் சொதப்பினார் ஷஹீன் ஷா அப்ரிடி. பாகிஸ்தான் அணியின் ஃபீல்டர்கள் இரண்டு எளிய கேட்ச்களை கோட்டை விட்டு அவரை சோதித்தனர். ஒரு பக்கம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மறுபக்கம் பாகிஸ்தான் அணியின் பீல்டர்கள் என இரண்டு பக்கமும் அடி வாங்கினார் கேப்டன் அப்ரிடி.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் டெவான் கான்வே விக்கெட்டை முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே வீழ்த்தி ஷஹீன் ஷா அப்ரிடி தன் கேப்டன்சியை அபாரமாக துவக்கினார். ஆனால், அதன் பின் அவர் வீசிய 3வது ஓவரில் மட்டும் 24 ரன்கள் குவிக்கப்பட்டது.
நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன் என அனைவரும் அதிரடி ஆட்டம் ஆடினார்கள். பாகிஸ்தான் அணி நிலைகுலைந்து போனது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 226 ரன்கள் குவித்தது. டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான். பாகிஸ்தான் வீரர்கள் அதிக கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டதும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அதிக ரன்களை விட்டுக் கொடுக்க முக்கிய காரணம்.
ஷஹீன் ஷா அப்ரிடி 4 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ஆமீர் ஜமால் 4 ஓவர்களில் 55 ரன்களும், உசாமா மிர் 51 ரன்களும் விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். அபாஸ் அப்ரிடி 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஹாரிஸ் ரௌப் 2 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து சேஸிங் செய்த பாகிஸ்தான் அணி 180 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. 46 ரன்கள் வித்தியாசத்தில் ஷஹீன் அப்ரிடியின் கேப்டன்சியில் ஆடிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.