பெங்களூர் : நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களை சாய்த்து ஜாம்பவான்கள் செய்த சாதனைகளை முறியடித்துள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் பெரிய ஃபார்மில் இல்லாத ட்ரென்ட் பவுல்ட், அதிரடியாக ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு எச்சரிக்கையாக மாறி உள்ளது.
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் சிறப்பாக செயல்பட்டு 10 ஓவர்களில் 37 ரன்கள் குவித்து 3 விக்கெட்களை சாய்த்தார்.

அவர் இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய போது ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் மொத்தமாக 50 விக்கெட்களை வீழ்த்தி மைல்கல் சாதனை படைத்தார். அதே ஓவரில் மேலும் ஒரு விக்கெட், அதன் பின் கடைசியில் ஒரு விக்கெட் என மொத்தம் 3 விக்கெட்களை சாய்த்தார்.
அவர் உலகக்கோப்பை தொடர்களில் 28 இன்னிங்க்ஸ்களில் 50 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம், விரைவாக 50 விக்கெட்கள் வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் கிளென் மெக்கிராத் (30 இன்னிங்க்ஸ்), முத்தையா முரளிதரன் (30 இன்னிங்க்ஸ்), வாசிம் அக்ரம் (33 இன்னிங்க்ஸ்) உள்ளிட்ட ஜாம்பவான்களை முந்தி இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் 19 இன்னிங்க்ஸில் 50 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். லசித் மலிங்கா 25 இன்னிங்க்ஸில் 50 விக்கெட் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 28 இன்னிங்க்ஸில் 50 விக்கெட் வீழ்த்தி ட்ரென்ட் பவுல்ட் மூன்றாவது இடத்தில் தான் இருக்கிறார்.
இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் 50 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மொத்தமே ஐந்து வீரர்கள் தான் இருந்தனர். அந்த ஜாம்பவான்கள் வரிசையில் ஆறாவதாக இணைந்துள்ளார் ட்ரென்ட் பவுல்ட். 50 விக்கெட்களுகும் மேல் வீழ்த்திய வீரர்கள் - கிளென் மெக்கிராத் 71 விக்கெட்கள், முத்தையா முரளிதரன் 68 விக்கெட்கள், மிட்செல் ஸ்டார்க் 59 விக்கெட்கள், லசித் மலிங்கா 56 விக்கெட்கள், வாசிம் அக்ரம் 55 விக்கெட்கள், ட்ரென்ட் பவுல்ட் 50 விக்கெட்கள்.
நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ள அணி என்பதால், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியுடன், நியூசிலாந்து நான்காம் இடம் பிடித்து அரை இறுதியில் மோதக் கூடும். அப்படி நடந்தால் ட்ரென்ட் பவுல்ட்டின் இந்த சமீபத்திய ஃபார்ம் இந்தியாவுக்கு பாதிப்பாக அமையும்.
அதிலும் இந்தியா மும்பையில் தான் அரை இறுதிப் போட்டியில் ஆட உள்ளது. ட்ரென்ட் பவுல்ட் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்பதால் அவருக்கு அந்த மைதானம் அத்துப்படி. அதனால், அவரின் முதல் சில ஓவர்கள் இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருக்கக் கூடும்.