நாக்பூர்: பெண்கள் டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
5 - வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து, மேற்கு இந்திய தீவுகள் உள்பட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நாக்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணியன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட் ஆகி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தனர்.
இந்த சரிவில் இருந்து அந்த அணியால் கடைசி வரை மீள முடியவில்லை. எல்ய்ஷே பெர்ரி மட்டும் நிலைத்து நின்று ஆடி 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்களை இழந்து 103 ரன்கள் எடுத்தது.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நியூசிலாந்து கேப்டன் பேட்ஸ் 23 ரன்களும், விக்கெட் கீப்பர் ரேச்சேல் 37 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 16.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் லேய்க் காஸ்பெரேக் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.