கார்டிப்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் ஸ்டெம்பில் பட்டும் பெயில்ஸ் விழாத காரணத்தால் இலங்கை கேப்டன் கருணரத்னே அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்காமல் தப்பித்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. ஜூலை 14, 2019 வரை நடக்கும் இந்த தொடரில், மொத்தமாக 48 போட்டிகள் நடக்கின்றன.
இந்நிலையில் உலக கோப்பை தொடரின் 3வது போட்டியில், நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு, கேப்டன் கருணரத்னே (52*) அரை சதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 29.2 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி பேட்டிங் செய்த போது, ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. நியூசி. வீரர் போல்ட் 6வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை கருணரத்னே எதிர்கொண்டார். ஆனால் அந்த பந்தை அவர் தவறவிட, பந்து நேராக ஸ்டெம்ப்பிற்கு மிக அருகில் சென்றது.
பந்து ஸ்டெம்பில் பட்டது. ஆனால், பெயில்ஸ் கீழே விழவில்லை. ரீப்ளேவில் பார்த்த போது, பந்து ஸ்டெம்பில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. பெயில்ஸ் விழாத காரணத்தால், கருணரத்னே அவுட்டாகவில்லை. நியூசிலாந்து வீரர்கள், இதனை கண்டு செய்வதறியாது திகைத்து, சிரித்தனர்.
மாறாக மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்றார். அதை சரியாக பயன்படுத்திய கருண ரத்னே அரைசதம் அடித்தார். ஆனால் மறுமுனையில் அவருக்கு உறுதுணையாக யாரும் களத்தில் நிற்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து, இலங்கை அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் அந்த இலக்கை எட்டிய நியூசிலாந்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.