கான்பூர்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்தின் திட்டம் என்ன என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் உடைத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டி20 போட்டி தொடர் முடிவடைந்ததை அடுத்து டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் ( அக்.25) கான்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

பலமான இந்திய அணி
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியை சொந்த மண்ணில் அசைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. ஏனென்றால் இந்திய களங்களில் சுழற்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான சூழல் நிலவும். ஆனால் அதனை சமாளிக்க முடியாமல் அயல்நாட்டு அணிகள் மோசமான தோல்விகளை பெற்று சென்றுள்ளதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இந்தியாவுக்கு எப்போதுமே தலைவலியாக விளங்கும் நியூசிலாந்து அணியும் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
நியூசிலாந்தின் திட்டம்
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான திட்டம் குறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் பேசியுள்ளார். அதில் இந்தியாவில் அயல்நாட்டு அணிகள் எப்படி டெஸ்ட் தொடரை தோல்வியடைந்தன என்பது குறித்து பார்க்க வேண்டும். அப்போது தான் என்ன சவால் காத்துள்ளது என்பது தெரியவரும். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என்பது தான் வழக்கமான ஃபார்முலா. ஆனால் இந்தியாவில் அது எடுபடாது. இங்கு 3 ஸ்பின்னர்கள் தேவை.
நம்பிக்கை
இந்த தொடரில் நியூசிலாந்து தரப்பில் 3 ஸ்பின்னர்களை நீங்கள் காணலாம். அது களம் எப்படி உள்ளது என்பதை பொறுத்து மாறுபடலாம். முதல் டெஸ்ட் நடைபெறும் கான்பூரில் கருப்பு மனலும், 2வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மும்பையில் செம்மண்ணும் இருக்கும். எனவே அதற்கேற்றவாறு பழகிக்கொள்ள வேண்டும். எங்களுக்கு இங்குள்ள நல்ல விஷயம் என்னவென்றால் இரண்டு போட்டியும் வெவ்வேறு இடத்தில் நடைபெறுகிறது. இதனால் களங்களை பொறுத்து ஆட்டத்தின் அணுகுமுறை மாறுபடலாம் என கேரி ஸ்டெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.