வெலிங்டன்: உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து சாம்பியன் என்று அறிவிக்கப் பட்ட சர்ச்சை நீடிக்கும் நிலையில், நியூசிலாந்து ரக்பி அணி, ஐசிசியை சீண்டியுள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது.

சூப்பர் ஓவரிலும் இரு அணிகள் ஒரே ஸ்கோரை அடிக்க, அதுவும் டை ஆனது. இதனால், அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஐசிசியின் இந்த விதிமுறை பலத்த சர்ச்சையையும், கடுமையான விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. கூடுதலாக ஒரு ஓவர் சூப்பர் ஓவராக வீசியிருக்கலாம் என்றும் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது வரை இந்த சர்ச்சை ஓயாமல் இருக்கும் நிலையில், நியூசிலாந்து ரக்பி அணி, தன் பங்கிற்கு ஐசிசியை கடுமையாக சீண்டி இருக்கிறது.
ப்ரீடம் கோப்பை ரக்பி தொடரில் வெலிங்டனில் நடைபெற்றது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மோதிய போட்டி 16-16 என்ற கணக்கில் டிரா ஆனது. போட்டி முடிந்த பின்னர், வெலிங்டனில் பவுண்டரி கணக்குகள் பின்பற்றப்படவில்லை.
போட்டி டிரா ஆனது என்று உலக கோப்பை பைனல் சர்ச்சையை மையமாக வைத்து, நியூசிலாந்து ரக்பி அணி கிண்டல் செய்துள்ளது. ப்ரீடம் ரக்பி தொடரில் நியூசிலாந்தே அதிக முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.