மும்பை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் 11 சீசன்களை எட்டியுள்ள போதும், அதன் வசீகரம் சற்றும் குறையவில்லை. தொடர்ந்து அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில், மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னோட்டம் நாளை துவங்க உள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்தத் தொடருக்கு உள்ள வரவேற்பு, எதிர்பார்ப்பு ஒவ்வொரு சீசனிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் போட்டிப் போட்டு இதில் பங்கேற்று வருகின்றனர்.
மேலும் உள்நாட்டில் உள்ள, தேசிய அணிக்காக விளையாட வீரர்களுக்கும் தங்களுடைய திறமையை நிரூபிக்கும் களமாக ஐபிஎல் மாறியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், பல நாடுகளிலும், இதே பாணியில் உள்நாட்டு டி-20 போட்டித் தொடர்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், பிசிசிஐயின் கருணை தற்போது மகளிர் கிரிக்கெட் பக்கமும் திரும்பியுள்ளது. கடந்தாண்டு உலகக் கோப்பை போட்டியின் பைனல்ஸ் வரை முன்னேறியதை அடுத்து, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் மீதான கண்ணோட்டம் மாறியுள்ளது.
அந்த வகையில், மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையிலும், இளம் வீராங்கனைகளை ஊக்குவிக்கவும், கண்டுகொள்ளவும் ஐபிஎல் போல, மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அதற்கு முன்னோட்டமாக, நாளை மும்பையில் காட்சி போட்டி நடக்க உள்ளது. மும்பையில் ஐபிஎல் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் நாளை மாலை மோதுகின்றன.
அதற்கு முன், மதியம் 2 மணிக்கு இந்த காட்சி கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில், 20 உள்நாட்டு வீராங்கனைகளைகள், 10 வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஒரு அணியில் தலா 10 உள்நாட்டு வீராங்கனைகளும், 5 வெளிநாட்டு வீராங்கனைகளும் இருப்பர். முதல் முறையாக நடக்கும் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.