இந்தூர்: இந்திய டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு வீரர் உள்ளூர் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் பதக் என்ற அந்த வீரர், தற்போது நடைபெற்று வரும் மத்திய பிரதேசம் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆடி வருகிறார்.
நேற்று நடந்த போட்டியில் அவர் 48 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து மிரட்டி இருக்கிறார். பந்தல்கண்ட் புல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், ஜபல்பூர் ராயல் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்துகளில் சதத்தை எட்டினார். அதன் பிறகு அதிரடியாக ஆடி, 48 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும்.

இதற்கு முந்தைய போட்டியில் அவர் 22 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இருந்தார். அந்தப் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 340.91 ஆக இருந்தது. இதுவரை மத்திய பிரதேசம் பிரீமியர் லீக் தொடரில் அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 229 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 45.8 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 200-க்கும் அதிகமாகவும் உள்ளது.
மேலும், தனது முன்னுதாரணமாக சூர்யகுமார் யாதவைத் தான் சுட்டிக்காட்டி இருக்கிறார். தான் சூர்யகுமார் யாதவைப் போல அதிரடியாக ஆடுவதற்கு சில காலமாகப் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறினார். விரைவில் இவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இவரை வாங்குவதற்கு மற்ற அணிகள் போட்டி போடும் வாய்ப்பு உள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தற்போது 34 வயதை எட்டி இருக்கிறார். அவரால் இன்னும் சில ஆண்டுகளே கிரிக்கெட் ஆட முடியும் எனும் நிலையில் அவரது இடத்தை அபிஷேக் பதக் அடைவாரா? இந்திய டி20 அணியில் இடம் பெற ஏற்கனவே பல இளம் அதிரடி பேட்ஸ்மேன்கள் போட்டி போட்டு வரும் நிலையில் அவர்களை தாண்டி அபிஷேக் தனக்கான இடத்தை பிடிப்பாரா? என்று பார்க்கலாம்.