அகமதாபாத்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், அந்த அணிக்காக 100 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக, அவர் நான்காவது ஆண்டிலேயே 100 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வீரர் 56 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அப்போது நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை அடித்து இருந்தார். அதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஒட்டுமொத்தமாக 100 சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை அவர் எட்டி இருந்தார்.

அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மார்கஸ் ஸ்டோனிஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக 56 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். கே.எல். ராகுல் 53 சிக்ஸர்களையும், குவின்டன் டி காக் 40 சிக்ஸர்களையும், ஆயுஷ் பதோனி 38 சிக்ஸர்களையும் அடித்திருந்தனர்.
இந்த போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம், நிக்கோலஸ் பூரன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் எட்டினார். மேலும், இந்த ஆண்டு அவர் அடிக்கும் ஐந்தாவது அரை சதமாகவும் இது அமைந்தது. மற்றொரு வீரரான மிட்செல் மார்ஷ் 117 ரன்கள் எடுத்திருந்தார்; அவரும் 500 ரன்களைக் கடந்தார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத போதும், அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஒரே ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் தாண்டி ரன் குவித்தது மட்டுமே அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக நிக்கோலஸ் பூரணை 21 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்து இருந்தது. தனக்கு கொடுத்த தொகை நியாயமானது தான் என்பதை ரன் குவிப்பின் மூலமும், இந்த சிக்ஸர் சாதனை மூலமும் நிரூபித்து இருக்கிறார் நிக்கோலஸ் பூரன். அடுத்த ஆண்டும் அவரை அந்த அணி தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.