ஏம்ப்பா 70 வயசுல ஜனாதிபதியாகலாம், பிசிசிஐயில் இருக்க கூடாதா? குமுறும் நிரஞ்சன் ஷா
டெல்லி : 70 வயதைக் கடந்தவர் இந்திய குடியரசுத் தலைவராக இருக்கும் போது, நான் ஏன் பிசிசிஐ நிர்வாகத்தில் இருக்கக் கூடாது என்று நிரஞ்சன் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
லோதா சீர்திருத்தப் பரிந்துரைகள் ஆய்வுக் குழுவில் சேர்க்கப்பட்ட முன்னாள் பிசிசிஐ நிர்வாகி நிரஞ்சன் ஷா, சௌரவ் கங்குலி தலைமையிலான சிறப்புக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். பிசிசிஐ கமிட்டியில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 7 நபர் குழுவுடன் அவர் சிறப்பு அழைப்பாளராக சேர்க்கப்பட்டார். ஆனால் லோதா பரிந்துரைகளின் படி அவர் தகுதியிழப்புச் செய்யப்பட்டார்.
இது குறித்து நிரஞ்சன் ஷா செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "வயதைக் காரணம் காட்டி சொல்லப்படும் விஷயங்கள் எனக்குப் புரியவேயில்லை. இந்தியக் குடியரசு தலைவர் 70 வயதிற்கும் மேல் பதவியில் இருக்க முடியும் என்றால் நாங்கள் ஏன் 70 வயதுக்கு மேல் பிசிசிஐயில் பணியாற்ற முடியாது."

வயது பாகுபாடு ஏன்?
"உடலளவிலம் மனதளவிலும் தகுதியுடையவராக இருந்தால் உயிருடன் இருக்கும் வரை யார் வேண்டுமானாலும் பணியாற்றலாம். ஆனால் வயதைக் காட்டி பாகுபாடு செய்வதை என்னால் ஏற்க முடியவேயில்லை அதைத்தான் லோதாக் குழு பரிந்துரைத்துள்ளது" என்றார்.

தகுதி இழப்பு
சௌராஷ்ட்ராவைச் சேர்ந்த ஷா, லோதா பரிந்துரைகளை ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த உதவ சௌரவ் கங்குலி தலைமையிலான குழுவில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் லோதா குழு பரிந்துரைகளின் படி வயது அடிப்படையில் தகுதி இழக்கிறார்.

வாக்குரிமையை பறிக்க முடியாது
"நாங்கள் பிசிசிஐ கூட்டங்களில் லோதா கமிட்டி பரிந்துரைகளை நிறைய விவாதித்துள்ளோம் என்ற அடிப்படையில் இந்தக் குழுவில் எனது அனுபவம் உதவும். அதே போன்று ஒருமாநிலம் ஒரு வாக்கு என்பதை நான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. ஆனால் நாட்டில் பழமையான ஒரு மாநில வாரியத்தின் வாக்குரிமைகளை நீங்கள் எப்படி பறிக்க முடியும்? மும்பை கிரிக்கெட்டுக்கும் இது பொருந்தும், காரணம் இந்திய கிரிக்கெட்டுக்கு மும்பை கிரிக்கெட் வாரியம் ஏகப்பட்ட பங்களிப்பு செய்துள்ளது.

நம்பிக்கை
புதிய உறுப்பினருக்கு வாக்குரிமை அளிப்பதில் எங்களுக்கு பிரச்சினைகள் இல்லை, ஆனால் மேற்கு மண்டலம் ஒரு பெரிய பங்களிப்பாளராக வாக்குரிமை உடையதே. அதே போல் ஒரு பதவிக்காலம் முடிந்த பிறகு அதே நபர் வேறொரு பதவியில் அமர 3 ஆண்டுகால இடைவெளி தேவை என்ற விதிமுறையும் எனக்குப் புரியவேயில்லை. 18 கிரிக்கெட் சங்கங்கள் செய்துள்ள இடைக்கால மனு மீதான உத்தரவு நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கும் என்றே கருதுகிறோம் என்று கூறியுள்ளார் நிரஞ்சன் ஷா.


Click it and Unblock the Notifications