இந்திய அம்பயர் நிதின் மேனனுக்கு கிடைத்த ஐசிசி கௌரவம்.. எலைட் பேனலில் இடம் பெறும் 3வது இந்தியர்!
துபாய் : இந்திய அம்பயர் நிதின் மேனனுக்கு ஐசிசி அம்பயர்கள் எலைட் பேனலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் அம்பயர்கள் பங்கு அதிகம். அம்பயர்களை உருவாக்கி, நிர்வகிக்கும் பொறுப்பு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வசம் உள்ளது.
இந்தியாவை சேர்ந்த பல அம்பயர்கள் ஐசிசியில் இடம் பெற்றுள்ளனர். முதலில் அம்பயர்கள் "பேனல் ஆப் அம்பயர்" எனப்படும் முதல் நிலையில் இடம் பெறுவர்.

எலைட் பேனல்
சிறந்து விளங்கும் அம்பயர்களுக்கு "எலைட் பேனல் ஆப் அம்பயர்" என்ற சிறப்பு அந்தஸ்து கிடைக்கும். இந்த அம்பயர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் இதுவரை இரண்டு அம்பயர்கள் மட்டுமே எலைட் பேனலில் இடம் பெற்று இருந்தனர்.

கௌரவம்
தற்போது மூன்றாவது நபராக நிதின் மேனன் அந்த குழுவில் தேர்வாகி இருக்கிறார். 36 வயதாகும் நிதின் மேனன் 3 டெஸ்ட் போட்டிகள், 24 ஒருநாள் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகளுக்கு அம்பயராக இருந்துள்ளார். அவரது சிறப்பான செயல்பாடுகளை கண்டு அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

ரவி விடுவிப்பு
இதற்கு முன்னதாக ஸ்ரீநிவாஸ் வெங்கடராகவன் நீண்ட காலம் எலைட் பேனலில் இடம் பெற்று இருந்தார். அவருக்கு பின் சில ஆண்டுகளுக்கு முன் சுந்தரம் ரவி எலைட் பேனலில் இடம் பெற்றார். எனினும், அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

தந்தையும் அம்பயர்
இந்த நிலையில், நிதின் மேனன் எலைட் பேனலுக்கு தேர்வாகி இருக்கிறார். இவரது தந்தை நரேந்திர மேனன் முன்னாள் சர்வதேச அம்பயர் எனபது குறிப்பிடத்தக்கது. 2004இல் மத்திய பிரதேச அணிக்காக இரண்டு லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடிய நிதின் மேனன், அதன் பின் அம்பயராக மாறினார்.


Click it and Unblock the Notifications