சிட்னி: மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் புகழின் உச்சத்துக்கு சென்ற நிதிஷ் குமார் ரெட்டி, சிட்னி டெஸ்ட் போட்டியில் மிகப் பெரும் சரிவை சந்தித்தார். சிட்னியில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் நிதிஷ் குமார் ரெட்டி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
மெல்போர்ன் போட்டியில் ஆனது முதல் டெஸ்ட் போட்டி சதத்தை அடித்து அசத்தி இருந்தார். அதிலும் எட்டாம் வரிசையில் இறங்கி இந்திய அணியை மிகப்பெரும் சரிவிலிருந்து மீட்டு இருந்தார். அதனால். இந்தியாவின் ஹீரோவாக பார்க்கப்பட்டார் நிதிஷ் குமார் ரெட்டி. மேலும், அந்த சதத்தின் மூலம் 2025 பார்டர் - கவாஸ்கர் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஆஸ்திரேலிய ஊடகங்களாலும் நிதிஷ் குமார் பெரிதாக புகழப்பட்டார். ஆனால், அனைத்தும் ஒரே போட்டியில் தலைகீழாக மாறிவிட்டது. சிட்னி டெஸ்ட் போட்டியில் 35 வயதான ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலான்ட் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நூறில் இருந்து 0-வுக்கு வந்து இருக்கிறார் நிதிஷ் குமார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல் இந்திய வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரிஷப் பண்ட் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்து 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஸ்காட் போலான்ட் வீசிய 57வது ஓவரின் நான்காவது பந்தில் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்து இருந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே நிதிஷ் குமார் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து இந்திய அணி 120 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.
"இது தான் டெஸ்ட் கிரிக்கெட் என்பதை நிதிஷ் குமார் புரிந்து கொண்டிருப்பார்" என முன்னாள் வீரர்கள் வர்ணனையின் போது சுட்டிக்காட்டினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன் குவிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அதை நிதிஷ் குமார் உணர்ந்து, இனி வரும் ஆட்டங்களில் பொறுப்புடன் ஆட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.