மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக ஜனவரி 11 முதல் சொந்த மண்ணில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.
அனுபவமிக்க ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக 22 வயதான நிதிஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் சர்வதேச அளவில் வெறும் இரண்டு ஒருநாள் போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார்.

தனது யூடியூப் சேனலில் நிதிஷ் குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "நிதிஷ் குமார் ரெட்டி என்ன சாதித்தார்? அவர் எப்படி ஒரு ஆல்-ரவுண்டராகக் கருதப்படுகிறார்? ஹர்திக் பாண்டியாவுக்கு அவர் எப்படி மாற்று? அவருக்குப் பந்துவீச வாய்ப்பே கிடைக்காது, அதனால் எதிரணி அவரை அடித்து நொறுக்கும். அதற்கான வாய்ப்பே இல்லை" எனக் கடுமையாக விமர்சித்தார்.
இந்தத் தேர்வின் பின்னால் உள்ள தர்க்கம் தனக்குப் புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.நிதிஷ் தனது இரண்டே ஒருநாள் போட்டிகளில் பேட் மற்றும் பந்து இரண்டிலும் மிகக் குறைவாகவே பங்களித்துள்ளார். அவர் 27 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆறு ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 7.74 என்ற அதிக எகானமி விகிதத்தில் ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
இந்தச் சூழலில் நிதிஷுக்குப் பதிலாக அக்சர் படேலைத் தேர்வு செய்திருக்கலாம் என ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்தார். அணியில் ஏற்கெனவே ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர்.அக்சர் படேலை நீக்கியது குறித்து ஸ்ரீகாந்த், "நிதிஷ் குமார் ரெட்டியின் உள்ளூர் கிரிக்கெட் சாதனை அவ்வளவு சிறப்பாக இல்லை. அதற்குப் பதிலாக அக்சர் படேலைத் தேர்வு செய்திருக்கலாம்.
அவர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர், டி20 போட்டிகளில் துணை கேப்டனாகவும் இருக்கிறார். அக்சர் என்ன தவறு செய்தார்? அவர் மிகச் சிறப்பாகவும் நிலையான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வரும் நிலையில் திடீரென ஏன் நீக்கப்பட்டார்?" என கேள்வி எழுப்பினார். அக்சர் 71 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் 23-க்கும் அதிக சராசரியும், பந்துவீச்சில் 4.50-க்கும் குறைவான எகானமி விகிதத்தையும் கொண்டுள்ளார்.