மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை பெரும் சரிவில் இருந்து மீட்ட நிதிஷ் குமார் ரெட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டவர், என்பதோடு 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்ற போது அவரும் அதில் அங்கம் வகுத்திருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்து சிறப்பாக செயல்பட்டு பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து ஆல் ரவுண்டராக இந்திய அணியில் இடம் பிடித்தார் நிதிஷ் குமார் ரெட்டி. முதலில் இந்திய டி20 அணியில் இடம் பிடித்த அவர், அடுத்து நேரடியாக இந்திய டெஸ்ட் அணியில் வேகப் பந்து வீசக் கூடிய ஆல் - ரவுண்டர் என்ற அடிப்படையில் வாய்ப்பு பெற்றார்.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியிலேயே அதிக ரன் குவித்த வீரராகவும் மாறி இருக்கிறார். முதல் இரண்டு போட்டிகளில் சராசரியாக ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் 40 ரன்கள் சேர்த்த நிதிஷ் குமார், நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.
அதிலும் எட்டாம் வரிசையில் பேட்டிங் இறங்கி, பொறுப்பாக விளையாடிய நிதிஷ் தனது முதல் டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார். இதை அடுத்து அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அவரை முதன்முதலாக அடையாளம் கண்டு ஐபிஎல் தொடருக்கு அழைத்து வந்தது சிஎஸ்கே அணி தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
2021 ஐபிஎல் தொடர் துபாயில் நடைபெற்றது. துபாயில் அதிக அளவிலான நெட் பவுலர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் இந்தியாவிலிருந்து உள்ளூர் அளவிலான பந்து வீச்சாளர்களை அழைத்துச் சென்றன. அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அடையாளம் காணப்பட்டு துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார் நிதிஷ் குமார் ரெட்டி.
அங்கு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு வலைப் பயிற்சியின் போது பந்து வீசினார். அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது சிஎஸ்கே அணி வலைப் பயிற்சியில் பந்து வீசியவர்களும் இந்த வெற்றிக்கு காரணம் என சுட்டிக்காட்டி இருந்தது.
அப்படி முதன்முதலாக சிஎஸ்கே அணியில் நெட் பவுலராக வாய்ப்பு பெற்ற நிதிஷ் குமார் ரெட்டி. அதன் பின் ஐபிஎல் அரங்கில் கவனம் பெற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். அங்கிருந்து தற்போது இந்திய அணியில் இடம் பெற்று முக்கிய வீரராக மாறி இருக்கிறார்.