டெல்லி: ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இனி நிதிஷ் ராணா உத்தரப் பிரதேச அணிக்காக களமிறங்குவார் என்று தெரிய வந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன் டெல்லி அணியின் ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டனாக யாஷ் துல் நியமனம் செய்யப்பட்டார். இதனால் கேப்டனாக விளையாடி வந்த நிதிஷ் ராணா, வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் டெல்லி அணியின் இளம் வீரரான ஹிருத்திக் ஷோக்கின் உள்ளிட்டோருடன் நிதிஷ் ராணாவுக்கு ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் வேறு அணிக்காக களமிறங்க நிதிஷ் ராணா ஆலோசித்து வந்தார்.

டெல்லி அணியின் முக்கியமான வீரரான நிதிஷ் ராணா, திடீரென விலகுவதாக எடுத்த முடிவு அம்மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மத்தியில், நிதிஷ் ராணாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பாக, டெல்லி அணியை விட்டு வெளியேறுவதற்காக நடைமுறைகளை நிதிஷ் ராணா தொடங்கி இருந்தார்.
இதன் காரணமாக டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் நிதிஷ் ராணாவுக்கு என்ஓசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை டெல்லி மாநில கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் ராஜன் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் அடுத்த உள்ளூர் கிரிக்கெட் சீசனில் நிதிஷ் ராணா, உத்தரப் பிரதேச அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடிவரும் ரிங்கு சிங் உத்தரப் பிரதேச அணியில் இருக்கிறார். இவர் மூலமாகவே நிதிஷ் ராணாவும் உத்தரப் பிரதேச அணிக்கு மாறியதாக கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச அணியின் மிடில் ஆர்டர் ரிங்கு சிங்கை மட்டுமே நம்பி இருக்கும் சூழலில், நிதிஷ் ராணாவின் வருகை அந்த அணிக்கு புதிய தெம்பை அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது. கேப்டன்சி ஈகோவால் நிதிஷ் ராணா டெல்லி அணியை விட்டு ஒட்டுமொத்தமாக உத்தரப் பிரதேச அணிக்காக மாறி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.