டெல்லி: டெல்லி மாநில கிரிக்கெட் அணியின் கேப்டனாக யாஷ் துல் நியமிக்கப்பட்ட நிலையில், நட்சத்திர வீரர் நிதீஷ் ராணா அணியில் இருந்து வெளியேறுவதற்காக கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டவர் நிதீஷ் ராணா. இவர் கேகேஆர் அணிக்கு கேப்டன்சி செய்வதற்கு முன்பாகவே, டெல்லி மாநில அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக நிதீஷ் ராணாவின் கேப்டன்சி பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் டெல்லி அணியில் இருந்து விலகுவதற்கான முடிவை நிதீஷ் ராணா எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் டெல்லி அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக இளம் வீரர் யாஷ் துல் நியமிக்கப்பட்டார். இவர் இந்திய ஏ அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக டெல்லி அணியிலும் கேப்டன்சி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் நிதீஷ் ராணாவை டெல்லி நிர்வாகம் கேப்டன்சியில் இருந்து விலக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கொந்தளித்த நிதீஷ் ராணா, டெல்லி அணியில் இருந்து வெளியேறி உள்ளூர் கிரிக்கெட்டில் வேறு மாநில அணிக்கு விளையாடும் முடிவை எடுத்துள்ளார். இதற்காக டிடிசிஏ நிர்வாகத்திடம், என்ஓசி கடிதத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த ரஞ்சி டிராபி தொடரின் போது நிதீஷ் ராணா மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக பாதி போட்டிகளில் பெஞ்ச் செய்யப்பட்டார். இதனால் கோபமடைந்து சில போட்டிகளில் இருந்து தானாகவே வெளியேறினார்.
அதுமட்டுமல்லாமல் நிதீஷ் ராணா டெல்லி அணியில் இருந்து வெளியேறுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி அணியின் சில வீரர்களுடன் நிதீஷ் ராணாவுக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக மும்பை அணிக்காக ஆடிய ஹிருத்தி ஷோக்கீன் உள்ளிட்டோருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நிதீஷ் ராணா வெளியேறுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
இருப்பினும் நிதீஷ் ராணாவை டெல்லி அணியில் தக்க வைக்கவும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இவர் மட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் துருவ் ஷோரேவும் டெல்லி அணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார். இவர் கடந்த ரஞ்சி சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளவர். குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அணி நிர்வாகம் சரியான வாய்ப்பு வழங்காததால், டெல்லி அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.