CSK: தோனி இருக்கும் வரை சிஎஸ்கே பக்கமே வர மாட்டோம்.. பின்வாங்கிய பயிற்சியாளர்கள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்டகால தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்கை மாற்ற நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், அந்தப் பதவிக்கு வர முன்னணி பயிற்சியாளர்கள் பலர் தயக்கம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது 'தல' தோனியின் ஆதிக்கம் தான். தோனி அணியில் இருக்கும் வரை தங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது எனப் பயிற்சியாளர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழும் சிஎஸ்கே, கடந்த 2023-ம் ஆண்டு கோப்பை வென்றது. அதன் பிறகு 2024, 2025 மற்றும் தற்போது முடிவடைந்துள்ள 2026 எனத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அந்த அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. தொடர் தோல்விகளால் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணியைப் புதுப்பிக்கப் புதிய பயிற்சியாளரை நியமிக்க நிர்வாகம் விரும்புகிறது.

யார் அந்த பயிற்சியாளர்?
இதுபற்றி வெளியாகியுள்ள தகவல்களின்படி, சிஎஸ்கே நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு முன்னணி இந்தியப் பயிற்சியாளரைத் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு நிர்வாகம் கடந்த ஆண்டு அணுகியுள்ளது. ஆனால், அவரைச் சிறிது காலம் காத்திருக்குமாறு நிர்வாகமே கூறியுள்ளது.
அதே சமயம், மற்றொரு பயிற்சியாளரோ, தோனி அணியில் இருக்கும் வரை தான் அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவே மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளாராம். அணியின் தினசரி நடவடிக்கைகள் மற்றும் முக்கிய முடிவுகளில் தங்களது அதிகாரம் செல்லாது என்றும், தோனியின் நிழல் எப்போதுமே பயிற்சியாளரின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
தோனியின் மர்மம்
2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாகத் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இருப்பினும், ஒட்டுமொத்த அணியின் கவனமும் அவர் மீதே இருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கூட ஒவ்வொரு போட்டியின் போதும் தோனியின் உடல்நிலை குறித்தே கேள்விகள் கேட்கப்பட்டன. இது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவருக்குமே ஒருவித தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோனி தனது ஓய்வு குறித்து இன்னும் தெளிவான முடிவை எடுக்காததும், அணியின் ஆலோசனைகளில் அவரது தலையீடு இருக்கும் என்ற எண்ணமும் புதிய பயிற்சியாளர்களை வரவிடாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிளே-ஆப் கனவு சிதைந்துள்ள நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
