கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் இல்லாமல் மைதானமே காலியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி நீக்கப்பட்டு பும்ரா, கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து களமிறங்கியுள்ள இந்திய அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

இந்தப் போட்டி சுவாரஸ்யமாக நடந்து வந்தாலும், மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் காலியாக இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும். பாலக்கலேவில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் டிக்கெட்டுகள் கிடைக்காமல் திண்டாடினர். ஆனால் கொழும்புவில் நடைபெற்ற வரும் போட்டிக்கு ரசிகர்கள் இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு டிக்கெட் கட்டணமே காரணமாக பார்க்கப்படுகிறது. கொழும்பு மைதானத்தில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. லோயர் லெவல், அப்பர் லெவல் மற்றும் டாப் லெவல் என்று பிரிக்கப்பட்டு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்ச டிக்கெட் விலையாக அமெரிக்க டாலர் மதிப்பில் 10 டாலராக ஒரு டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 10 டாலர், 50 டாலர், 75 டாலர், 150 டாலர் மற்றும் 200 டாலர் என்று 5 வகையாக டிக்கெட் கட்டணம் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.800 முதல் அதிகபட்ச கட்டணமாக ரூ. 16 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி இந்தியாவிலும் அல்லாமல், பாகிஸ்தானிலும் அல்லாமல் நடந்து வரும் நிலையில், வெளிநாட்டில் இவ்வளவு கட்டணம் நிர்ணயித்ததே மைதானம் காலியாக இருப்பதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.