
கேப்டன் தவான்
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வரும் ஜூலை 13ம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்கு துணை கேப்டன் புவனேஷ்வர் குமார். ரவி சாஸ்திரி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இத்தொடருக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இதனால், இப்போதே இத்தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

போட்டிகள் கொழும்புவில்
இத்தொடருக்கான இந்திய அணி, கொரோனா பாதுகாப்பு காரணமாக, மும்பையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பயோ பபுளில் வைக்கப்பட்டனர். அதில்14 நாட்களாக தங்கியிருந்த வீரர்கள், நேற்று (ஜூன்.28) இலங்கை சென்றடைந்தனர். கோச் டிராவிட், கேப்டன் தவான் உட்பட 20 பேர் கொண்ட இந்திய அணி, நேற்று காலை இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது. கொழும்பில் தரையிறங்கிய வீரர்கள், நேராக தனியார் ஓட்டலின் பயோ பபுளில் இணைக்கப்பட்டனர். ஏனென்றால் போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பயிற்சி ஆட்டம் மறுப்பு
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை 13ம் தேதி, முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி தொடர் தொடங்க இன்னும் 2 வார காலங்கள் உள்ளதால் இலங்கை உள்நாட்டு அணிகளுடன் பயிற்சி ஆட்டம் நடத்த இந்திய வீரர்கள் கோரியிருந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

மாலை வரவேற்பு
எல்லாம் சரி.. ஆனால், கொழும்பு சென்றிறங்கிய இந்திய வீரர்கள் உண்மையில் அதிர்ச்சி அடைந்தார்கள் எனலாம். அங்கு அவர்களை வரவேற்க, ஹோட்டல் நிர்வாகிகள் எவரும் இல்லை. பொதுவாக, வெளிநாட்டு தொடர்களின் போது, இந்திய அணிக்கு மாலை அணிவித்து வரவேற்பது வழக்கம். அதுபோல், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு அணி வீரர்களுக்கும் மாலை போட்டு வரவேற்பது வழக்கம். ஆனால், நேற்று வீரர்கள் இலங்கையில் இறங்கிய போது, அப்படி எந்த வரவேற்பும் கொடுக்கப்படவில்லை.

இலங்கை விளக்கம்
கடும் பாதுகாப்புடன் அவர்கள் நேரடியாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது இந்திய வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை என்று இலங்கை வாரியம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, வீரர்களுக்கு வழக்கமான மரியாதை கொடுத்து அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயோ-பபுள்
இதுகுறித்து, வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் மேனேஜர் பங்கஜ் சம்பத் கூறுகையில், "மாலை மரியாதையை விடுங்க. நாங்க முதல்ல இந்திய வீரர்களையே பார்க்கல. அவர்களை முன்னின்றும் அழைத்துச் செல்லல. அவர்கள் கடும் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜுலை 5ம் தேதி இலங்கை வீரர்களும் இங்கிலாந்தில் இருந்து வந்துவிடுவார்கள். பிறகு, இரு அணிகளும் கடுமையான கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications