டாக்கா: ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. கால்பந்து உலக கோப்பை போட்டிகள் காரணமாக, இந்தியா பங்கேற்கும் ஒருநாள் போட்டித்தொடரை நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சி சேனல்கள் ஆர்வம் காண்பிக்கவில்லையாம். கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் ஒரு தேசத்துக்கு நேர்ந்த இந்த அவலத்தை என்னவென்று சொல்வது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இம்மாதம் 15ம்தேதி அதாவது, வரும் ஞாயிற்றுக்கிழமை போட்டித்தொடர் ஆரம்பிக்க உள்ளது. ஆனால் இந்தியாவில் இக்கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை எந்த ஒரு தொலைக்காட்சியும் இந்த நிமிடம் வரை வாங்கவில்லை.

வங்கதேச தொடரை, நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை, வங்கதேசத்தின் ஹாசி டிவி சேனல் வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்திடமிருந்து இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை வாங்க எந்த தொலைக்காட்சியும் ஆர்வம் காண்பிக்கவில்லை. ஸ்டார் டிவி குழுமம், மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து ரூ.5 கோடிக்கு விலைபேசியதாம். இது மிக குறைவான தொகை என கூறி வங்கதேச தொலைக்காட்சி நிறுவனம் உரிமையை வழங்க மறுத்துவிட்டதாம்.
சோனி சிக்ஸ் தொலைக்காட்சி, பிபா உலக கோப்பை போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதால், இந்த கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப ஆர்வம் காண்பிக்கவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், நியோ மற்றும் டென் சேனல்களுக்கும் நடுவே பிரச்சினை இருப்பதால், அவற்றுக்கு உரிமையை அளிக்க வங்க தேச தொலைக்காட்சி நிறுவனம் மறுப்பு தெரிவித்துவிட்டது. எனவே இந்த போட்டித்தொடர் இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கால்பந்து போட்டியை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவது, இந்திய அணியில் முன்னணி வீரர்கள் இல்லாதது போன்றவை ஸ்டார் குரூப் பின்வாங்க காரணமாக கூறப்படுகிறது.