தோனி ஓய்வு
2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக அப்போது வதந்திகள் வலம் வந்தன. ஆனால், அந்த தொடர் முடிந்த பின்னர் தோனி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவராக இந்திய அணியை விட்டு விலகி இருப்பதாக கூறப்பட்டது.
ஐபிஎல் பயிற்சி
தோனி இனி இந்திய அணியில் இடம் பெறவே முடியாது என்றெல்லாம் பேச்சுக்கள் வளர்ந்த நிலையில், அவர் 2020 ஐபிஎல் தொடருக்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அதன் மூலம், அவர் ஐபிஎல் தொடரில் ரன் குவித்து இந்திய அணியில் இடம் பெற உள்ளதாக ஊகங்கள் கிளம்பின.
மீண்டும் சிக்கல்
இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி அந்தத் தொடர் எப்போது நடக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. அதனால், தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதும் சிக்கலாக மாறி உள்ளது.
கடும் விவாதம்
இந்த நிலையில், மீண்டும் தோனி ஓய்வு குறித்த விவாதம் துவங்கியது. பலரும் தோனி ஐபிஎல் தொடரில் ஆடி தன் பார்மை நிரூபிக்காவிட்டால் இந்திய அணியில் இடம் பெறவே முடியாது எனக் கூறி மறைமுகமாக தோனி ஓய்வு பெற வேண்டும் என உணர்த்தி வருகின்றனர்.
கெவின் பீட்டர்சன் திட்டவட்டம்
இந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தோனி விஷயத்தில் அவர் தான் முடிவு செய்வார். வேறு யாரும் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என திட்டவட்டமாக கூறி, அதற்கு ஒரு முக்கிய காரணத்தையும் கூறி உள்ளார்.
யாரும் தலையிடக் கூடாது
"இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி என்ன செய்துள்ளார் என்பதை பார்க்கும் போது, எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். வேறு யாரும் அல்ல" என தோனி செய்த சாதனைகளை, பெற்றுக் கொடுத்த வெற்றிகளை சுட்டிக் காட்டினார் பீட்டர்சன்.
சிறந்த கேப்டன் தோனி தான்
முன்னதாக கெவின் பீட்டர்சன் தோனி தான் கிரிக்கெட் உலகின் ஆகச் சிறந்த கேப்டன் என பல ஜாம்பவான்களையும் பின் தள்ளி பேசி இருந்தார். அப்போது அது அதிரடியான பேச்சாக இருந்தது, இப்போது மீண்டும் தோனி விஷயத்தில் யாரும் தலையிடக் கூடாது என அதிரடியாக பேசி உள்ளார் பீட்டர்சன்.
கடினமான பணி
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் போல பாவிக்கப்படும் நிலையில், இந்திய அணியை அத்தனை அழுத்தத்தில் வெற்றிகரமாக வழிநடத்துவது கடினம் என்பதால் தோனியை சிறந்த கேப்டனாக தான் கருதுவதாக கெவின் பீட்டர்சன் காரணம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது