மும்பை: மும்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடத்தி வரும் பிரபல ஹோட்டலில் தமிழ்க் கலாச்சார உடையுடன் சாப்பிட சென்ற நபருக்கு அனுமதி அளிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் மட்டும் 765 ரன்களை விளாசி சாதனை படைத்தார். சச்சினுக்கு பின் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்து வரும் விராட் கோலி, பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறார். அதில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஆடை விற்பனை மற்றும் ஹோட்டல் தொழில்களை இந்திய முழுக்க மேற்கொண்டு வருகிறார். இவர் நடத்தி வரும் "One 8 Commune" என்ற ஹோட்டல் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உள்ளது. முதலில் பெங்களூருவில் தொடங்கிய இந்த ஹோட்டல், அடுத்தடுத்து மும்பை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டது.
இந்திய அணியின் பல்வேறு வீரர்களும் இவரது ஹோட்டலில் அவ்வப்போது சென்று உணவருந்தி புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதேபோல் பிரபலங்கள் பலரும் அவரது ஹோட்டலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் மதுரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான ராம் என்பவர் மும்பைக்கு சென்ற போது, விராட் கோலியின் ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளார். நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தாலும் அந்த ஹோட்டல் உணவை தவிர்த்து, விராட் கோலியின் பெயருக்காகவே சாப்பிட சென்றுள்ளார்.
இதற்காக பிரத்யேகமாக புதிய வேஷ்டி, சட்டை அணிந்து சென்றுள்ளார். ஆனால் ஹோட்டலுக்குள் சாப்பிட உள்ளே செல்ல முயன்ற போது, ஹோட்டல் நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரை அனுமதிக்க முடியாது என்று கூறியதோடு, டிரஸ் கோடு-க்கு அனுமதியில்லை என்று கூறி வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து ஹோட்டல் முன்பாக நின்று, இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில், இதுபோல் நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன். லுங்கி உள்ளிட்ட ஆடை அணிந்து உள்ளே அனுமதிக்க கோரவில்லை. தமிழ்க் கலாச்சார ஆடைக்கு அனுமதியில்லை என்பது கஷ்டமாக உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என்பது கூட தெரியவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில், ரசிகர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.