மும்பை: உலகக்கோப்பை தொடருக்காக 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 40 நாட்களே உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உலகக்கோப்பைத் தொடருக்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளதால், 3வது முறையாக இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது. அதேபோல் உலகக்கோப்பைத் தொடருக்கு முன் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான 17 வீரர்கள் மற்றும் ஒரு பேக் அப் வீரர் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் இருந்து தான் உலகக்கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.

அதில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர தேர்வு செய்துள்ளார். சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை மட்டுமே கங்குலி தேர்வு செய்திருக்கிறார்.
முக்கியமான பகுதியான மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்திருக்கிறார். கங்குலி தேர்வு செய்துள்ள அணியில் ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், நட்சத்திர வீரரான சாஹல், இளம் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இல்லாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.