லண்டன்:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறும் திட்டம் இல்லை. அப்படி வெளியான செய்திகள் தவறானவை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

34 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என சில காலமாகவே சிலர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். முன்பிருந்ததை போல சச்சினிடம் ஃபயர் இல்லை என்பது அவர்களின் கருத்து.
ஆனால் அதை பொய்ப்பிக்கும் வகையில் சச்சின் அவ்வப்போது அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்டுகிறார். தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள சச்சின் அங்கு அசத்தலாக ஆடி வருகிறார்.
இந்த நிலையில், ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற சச்சின் தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியானது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 34 வயதான எனக்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் உடல் தகுதியில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதை வைத்துக்கொண்டு அந்த பத்திரிக்கை, டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இந்த ஓய்வு முடிவை சனிக்கிழமை (08-09-2007) அன்று நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அறிவிக்கிறார்.
இதை தனது நெருங்கிய நண்பரிடம் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சச்சின் தெரிவித்ததாக அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அதனால் இந்தியாவில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் சச்சினுக்கு கடைசி போட்டி என்றும் அது தெரிவித்திருந்தது.
இருப்பினும் டெஸ்ட் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இதை சச்சின் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒருநாள் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறப்போவதாக யாரிடமும் சொல்லவில்லை. எந்த பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்கவில்லை. இது முற்றிலும் தவறான தகவலாகும். மேலும் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் சிறிதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேப்டன் டிராவிட் கூறுகையில், சச்சின் ஓய்வு பெறப்போவதாக வந்துள்ள தகவல் முற்றிலும் தவறானது. சிறப்பாக விளையாடி வரும் சச்சினின் கவனத்தை சிதறடிக்க பத்திரிக்கைகள் தேவையில்லாமல் தகவல்களை வெளியிடுகிறார்கள் என்று டிராவிட் கண்டித்துள்ளார்.