டெல்லி: பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது இல்லை என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் கூறியிருந்தார். அனுராக் தாகூரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:

எல்லைதாண்டிய பயங்கரவாத சம்பவங்கள் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்ட வரலாறு உள்ளது. இதுபோன்ற நிலையில் இருநாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவது சிறப்பானதாக இருக்காது.
இருநாடுகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கிறது. அதேநேரம், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாத வரையில் இருநாடுகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு கங்குலி கூறினார்.
முகமது யூசுப் சாடல்
ஆனால் அனுராக் தாகூர் கூறியது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறுகையில், அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக எங்களுடன் முறைப்படியான நேரடி தொடர்களில் பங்கேற்காமல் இந்தியா தவிர்த்து வருகிறது. இரு நாட்டு உறவு மேம்பட்டு இருந்த சமயத்திலும் கூட எங்களுடன் விளையாடுவதில் தயக்கம் காட்டினர். கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் அரசியல் அல்லது அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அனுராக் தாகூர் அரசியல் அறிக்கை விடுத்து வருகிறார். அவர் பாரதிய ஜனதா கட்சி தலைவராக பேசுகிறாரா? அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பேசுகிறாரா? என்பது தெரியவில்லை' என்றார்.