மும்பை: இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய வீரர்கள் பலரும் விளையாட தயாராகியுள்ளனர். துலீப் டிராபி அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், 4 அணிகளில் தேர்வாகியுள்ள வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வங்கதேச டெஸ்ட் தொடர் நெருங்கி வரும் சூழலில், இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் உள்ளிட்டோருக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ரிஷப் பண்ட், சுப்மன் கில், கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்ட அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய 4 பேரும் 4 அணிகளின் கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திலக் வர்மா, சிவம் துபே, கலீல் அஹ்மத், சாய் கிஷோர், மயங்க் அகர்வால், அதர்வா தய்டே, முஷீர் கான், சர்ஃபராஸ் கான், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சஹர், குமார் குசாக்ரா, உம்ரான் மாலிக், மயங்க் மார்க்கண்டே, சாய் சுதர்சன், ரஜத் பட்டிதர், அபிஷேக் போரெல், ஹர்சித் ராணா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சில வாரங்களுக்கு முன் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட விக்ரம் ரத்தோர் பேசுகையில், இந்திய அணியின் 3 வடிவங்களுக்குமான வீரராக ரிங்கு சிங் நிச்சயம் வருவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட் பக்கமும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் கூட ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு முன் முதல்தர கிரிக்கெட்டில் ரிங்கு சிங்கின் பேட்டிங் சராசரி 57.57ஆக உள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் 44 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங், 7 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் உட்பட 3,109 ரன்களை விளாசி இருக்கிறார்.
முதல் சுற்றுக்கான போட்டிகள் முடிவடைந்த பின் வங்கதேச டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. அதன்பின் மாற்று வீரர்கள் அறிவிப்பிலாவது ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, ஜெய்தேவ் உனாத்கட், சச்சின் பேபி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறுவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்பு வழங்காமல் வீணடித்தது போல் ரிங்கு சிங்கை வைத்து பிசிசிஐ அரசியல் செய்வதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.