மும்பை: டிசம்பர் மாதம் நடக்கவுள்ள யு19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறாதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யு19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் யு19 வீரர்களுக்கு இடையிலான இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் 8 முதல் 17ஆம் தேதி வரை யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள யு19 ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வந்தனர். தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த யு19 அணிக்கு கேப்டனாக உதய் சஹரன் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சவுமி குமார் பாண்டே துணை கேப்டனாகவும், அவினாஷ் ராவ் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் நடப்பு முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசியுள்ள ருத்ரா மயூர் படேல் மற்றும் சச்சின் தஹாஸ் இருவரும் தேர்வாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களான முஷீர் கான் மற்றும் நமன் திவாரி இருவரும் தேர்வாகியுள்ளனர்.
அதில் போல் அர்ஷின் குல்கர்னி, ஆதார்ஷ் சிங், ப்ரியன்ஷு மோலியா, முருகன் அபிஷேக், இன்னேஷ் மஹாஜன், தனுஷ் கவுடா, ஆராதியா சுக்லா ராஜ், ராஜ் லிம்பானி உள்ளிட்டோரும் தேர்வாகியுள்ளனர். இந்த யு19 இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த் ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக யு19 இந்திய அணிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாஷிங்டன் சுந்தர் தேர்வாகினார். அதன்பின் 2022ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பையில் மானவ் பரக் தேர்வாகினாலும், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் யு19 அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. மேலும்ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் இந்திய அணி லீக் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.