மெல்போர்ன்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை எந்த அணியும் 2வதாக பேட் செய்து 300 மற்றும் அதற்கு மேலான ஸ்கோரை வெற்றிகரமாக எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக 297 ரன்கள்தான் இங்கு வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, வங்கதேசம் இடையிலான காலிறுதிப் போட்டியில் இன்று முதலில் பேட் செய்த இந்தியா 302 ரன்களை எடுத்துள்ளது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் கூட பின்னர் கடைசி நேரத்தில் சுதாரித்து ஆடி 300 ரன்களைத் தாண்டி விட்டது இந்தியா.
மெல்போர்ன் மைதானம், உலகின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். இந்த மைதானத்தில் பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது என்பது கடினமானது.
இங்கு இதுவரை 144 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணிகளே அதிகம் வென்றுள்ளன. அதாவது 71 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன. 69 போட்டிகளில் மட்டுமே 2வது பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. அதாவது சேஸிங் கஷ்டமானது என்பது இதிலிருந்து புரியும்.
இங்கு பதிவான அதிகபட்ச அணி டோட்டல் என்பது உலக லெவன் அணியானது, ஆசிய லெவன் அணிக்கு எதிராக எடுத்த 344 ரன்கள்தான்.
வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர் 297 ஆகும். இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா இதை செய்திருந்தது.