உலகக் கோப்பை பற்றி கவலைப்பட கூட நேரமில்ல - நியூசிலாந்துக்கு காத்திருக்கும் பெரிய சவால்?
துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது பலமான அணியாக விளங்கி வருகிறது நியூசிலாந்து. 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை, 2021 டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி என கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அசத்தியது வில்லியம்சன் படை.
Recommended Video
ஆனால், டி-20 உலகக் கோப்பை இறுதி போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்து அணி தவறவிட்டது. இதனால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு கூட நியூசிலாந்து அணி நேரம் தரவில்லை. துபாயில் ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பை முடிந்த 2வது நாளே, நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

ஆம், இரண்டு நாள் இடைவெளியில் நியூசிலாந்து அணி 2055 கிமீ தூரம் பயணம் செய்து இந்தியாவுடன் புதன்கிழமையே ஜெய்ப்பூரில் சர்வதேச டி-20 போட்டியை விளையாட வேண்டும். இப்படி மன தளவிலும், உடல் அளவிலும் தொய்வாக இருக்கும் வீரர்களால் எப்படி விளையாட முடியும்.
குறைந்தபட்சம் இந்திய தொடருக்கு புதிய வீரர்களை கொண்ட அணியை களமிறக்காமல் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அதே அணியே விளையாடும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருப்பது தான் பெரிய கொடுமையே.
இத்தனை நெருக்கடியான சூழலை கூட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சிரித்த முகத்துடன் தான் எதிர்கொள்வாரே தவிர, தனக்கு ஓய்வு வேண்டும் என்று இந்திய வீரர்களை போல் கிரிக்கெட் வாரியத்திடம் அவர் கேட்கமாட்டார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வீரர்களின் நிலையை கொண்டு, கிரிக்கெட் அட்டவணையை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வல்லுனர்கள் விடுத்துள்ளனர்.
ஒரு சிலர் கொரோனாவால் பாதியில் நின்று போன ஐ.பி.எல். போட்டியை மீண்டும் செப்டம்பரில் நடத்துவதற்காக பி.சி.சி.ஐ. திட்டமிட்டது என்றும், இதற்காக பல்வேறு போட்டிகள் மாற்றப்பட்டு சிறிய சிறிய இடைவெளியில் நடத்தப்பட உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நியூசிலாந்துக்கு மட்டுமல்ல, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் தற்போது ஓய்வின்றி டி-20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் மற்ற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது.


Click it and Unblock the Notifications