மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ள நிலையில், இந்த வரலாற்றுச் சாதனையை மக்களுடன் கொண்டாடும் வகையிலான வெற்றிப் பேரணி இப்போதைக்கு நடைபெற வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ இதற்கு வேறு சில காரணங்களை கூறி உள்ளது. இதை அடுத்து ஆண்கள் அணி உலகக்கோப்பை வென்றால் ஊர்வலம், ஆனால் பெண்கள் அணிக்கு அந்த வரவேற்பு இல்லையா? என கேள்விகள் எழுந்துள்ளன.
2007-ல் தோனி தலைமையிலான டி20 உலகக்கோப்பை வென்ற அணியும், 2024-ல் ரோஹித் சர்மா தலைமையிலான டி20 உலகக்கோப்பை வென்ற அணியும் மும்பையில் திறந்த பேருந்தில் சென்று கோப்பையைக் காட்டி வெற்றிப் பேரணியில் ஈடுபட்டது போல, ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மகளிர் அணிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது நடக்காது என கூறப்படுவது விமர்சனத்தை கிளப்பி உள்ளது.

துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்திற்கு பிசிசிஐ முன்னுரிமை அளித்துள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, "இப்போதைக்கு வெற்றிப் பேரணி போன்ற எதுவும் திட்டமிடப்படவில்லை," என்று பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியை நேரில் கண்டுகளித்து, பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்ற சைகியா, திங்கட்கிழமையே துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவருடன் பிசிசிஐயின் மற்ற முக்கிய நிர்வாகிகளும் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஐசிசி கூட்டம் பிசிசிஐக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையை வென்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு இதுவரை கோப்பை வழங்கப்படாத சர்ச்சையை ஐசிசியின் கவனத்திற்குக் கொண்டு செல்ல பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்ததால், கோப்பை இந்திய அணிக்கு வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஐசிசியின் தலையீட்டைக் கோரி, கோப்பையை உரிய மரியாதை மற்றும் கௌரவத்துடன் திரும்பப் பெற பிசிசிஐ தீவிரமாக உள்ளது. இதுகுறித்து பேசிய சைகியா, "ஆசிய கோப்பை விவகாரத்தை நாங்கள் ஐசிசியிடம் எழுப்புவோம். எங்கள் கோப்பை உரிய மரியாதையுடன் எங்களிடம் திரும்பக் கிடைக்கும் என நம்புகிறோம்," என்றார்.
வெற்றிப் பேரணியை அவசரமாக நடத்த பிசிசிஐ தயங்குவதற்கு, சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட சோக நிகழ்வும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் இன்னும் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க, தேவ்ஜித் சைகியா தலைமையிலேயே பிசிசிஐ ஒரு குழுவை அமைத்துள்ளது. எனவே, பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக உறுதி செய்யாமல் பேரணியை நடத்த வாரியம் விரும்பவில்லை.
மும்பையில் வெற்றிப் பேரணி திட்டமிடப்படாத நிலையில், உலகக்கோப்பை வென்ற இந்திய அணி செவ்வாய்க்கிழமை (இன்று) டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் அலுவலகத்திலிருந்து பிசிசிஐக்கு இதுகுறித்த முறையான அழைப்பு வந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.