மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே பேட்ஸ்மேன்கள் தான் புகழின் உச்சியில் கொடி கட்டி பறப்பார்கள். கபில்தேவ் ஒரு பவுலராக இருந்தாலும் அவரும் பேட்டிங்கில் அதிரடியாக ஆடி ஆல்ரவுண்டர் என்ற அந்தஸ்தை பெற்று இருந்தார். கவாஸ்கர், சச்சின், கங்குலி, தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா என காலம் காலமாக பேட்ஸ்மேன்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த சூழலில் தற்போது ஒரு பவுலர் தான் இந்தியாவின் சிறந்த வீரராக விளங்கி வருகிறார். அந்த பவுலரை கண்டாலே பேட்ஸ்மேன்கள் நடுங்குவார்கள். மேலும் இந்திய அணி தோற்கப் போகிறது என நினைத்த பல போட்டிகளில் அவர் வெற்றியை தேடி தந்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின் தற்போது உள்ள சூழலில் இந்தியாவின் சிறந்த வீரர் என்றால் அது பும்ரா தான் என்று பாராட்டி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் இந்தியா எப்போதுமே பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடாகத்தான் கிரிக்கெட்டில் இருந்திருக்கிறது. அது நிச்சயம் என்றும் மாறப் போவதில்லை. ஆனால் முதல் முறையாக ஒரு பவுலர் அந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்று நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அது வேறு யாருமில்லை. அது நம் பும்ரா தான்.
நமது பும்ரா ஒரு சகாப்தத்தில் கிடைக்கும் ஒரு பவுலராக விளங்குகிறார். பும்ராவை நாம் இன்னும் அதிகம் கொண்டாட வேண்டும். சென்னை மக்கள் எப்போதுமே பவுலர்களை அதிகம் விரும்புவார்கள். பவுலர்களின் செயல்பாட்டுக்கு மதிப்பு அளிப்பார்கள். பும்ரா கடந்த நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பு சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். ஆனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை கொண்டாடியது போல் சென்னை மக்கள் கூடி அவருக்கு அன்பு செலுத்தினர்.
பௌலர்களுக்கு எப்போதுமே மரியாதை கொடுக்கும் இடமாக சென்னை இருக்கிறது. பும்ரா ஒரு சாம்பியன். அவரை சாம்பியன் போலவே நாம் மதிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பும்ரா தான் தற்போது வீரர்களில் மிகவும் மதிப்பு மிக்க இந்திய கிரிக்கெட் வீரராக இருக்கிறார் என்று அஸ்வின் பாராட்டி உள்ளார். முப்பது வயதான பும்ரா இதுவரை 36 டெஸ்ட் போட்டியில் விளையாடி 159 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதில் பத்து முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 89 போட்டியில் விளையாடி 149 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 70 போட்டிகளில் விளையாடி 89 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் 133 போட்டிகளில் விளையாடி 165 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் பும்ரா இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் அவருடைய சராசரி 16.36 எக்கனாமி 2.85 என்ற மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. இந்த சூழலில் தான் இந்திய அணி வரும் 19ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
அடுத்த இரண்டு மாதங்களில் இந்திய அணி சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட்களில் விளையாடுகிறது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். அதற்கு பும்ராவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதனால் தான் பிசிசிஐ அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வு அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.