
ஏமாற்றிய சேவாக்
டாசில் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மார்னே மோர்க்கலும், இந்தியாவின் தற்போதைய அதிவேக பந்து வீச்சாளருமான உமேஷ் யாதவ் ஆகியோர் பந்து வீச்சு தாக்குதலை தொடங்கினர். மோர்க்கல் பந்து வீச்சு எடுபடாத நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் வீரேந்திரசேவாக். முந்தைய மேட்சில் சென்னைக்கு எதிராக சதம் அடித்து அசத்திய சேவாக் பைனலில் வழக்கம்போல சொதப்பினார்.

இளம் வீரர்கள் டாப்
சேவாக் அவுட் ஆனதை தொடர்ந்து கேப்டன் பெய்லி களத்திற்கு வந்தார். அவரும் சுனில் நரைன் ஓவரின் முதல் பந்திலேயே போல்ட் ஆகி பரிதாபமாக வெளியேறினார். பவர் பிளே முடிவில் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது பஞ்சாப். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளேயர்கள் நடையை கட்டியபோதிலும், உள்ளூர் வீரர்கள் விருதிமான் சாஹாவும், மனான் வோக்ராவும் அணியை சரிவில் இருந்து மீட்க தொடங்கினர்.

டக்வெல்லாகிய மேக்ஸ்வெல்
வோக்ரா மெதுவாக ஆடியபோதிலும், விருதிமான் சாஹா ஆட்டத்தில் அனல் பறந்தது. 29 பந்துகளில் விருதிமான் சாஹா அரை சதம் கடந்து அசத்தினார். 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் 20வது ஓவர் முடிவில் 199 ரன்களை குவிக்க விருதிமான் சாஹாவின் அதிரடிதான் காரணம். வோக்ரா அவுட் ஆனதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் வந்தார். ஆனால் முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு, ஆறடி உயரத்தில் நின்ற மோர்னே மோர்க்கலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த டோணி தயார்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 199 ரன்களை குவித்தது. 55 பந்துகளில் 115 ரன்களை குவித்து நாட்-அவுட்டாக நின்றார் விருதிமான் சாஹா. ஐபிஎல் பந்தையங்களில் இது அவரது முதலாவது சதமாகும். வங்கதேச அணியுடனான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தன்னை தேர்வு செய்தது சரிதான் என்பதை நேற்றைய ஆட்டத்தில் அவர் நிரூபித்தார்.

உத்தப்பா ஆட்டம் ஊத்திக்கொண்டது
பெரிய ஸ்கோரை துரத்த ஆரம்பத்திலேயே கொல்கத்தா அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்த சீசனில் அதிகம் ரன் குவித்து முதலிடத்திலுள்ள உத்தப்பா அந்த ஓவரில் அவுட்டானார். ஆனால் மனிஷ் பாண்டே 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தார். 3 பந்துகள் மிச்சமிருந்த நிலையிலேயே கொல்கத்தா வெற்றி பெற்றது.

நம்பிக்கை இருந்தது
போட்டிக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் கூறுகையில், நாங்கள் முதல் 7 போட்டிகளில் ஆடிய விதத்தை பார்த்தால் யாருமே கொல்கத்தா வெற்றி பெறும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். கடுமையான நெருக்கடிக்கு எங்கள் அணி வீரர்கள் உள்ளாகியிருந்தனர். அதை மீறி கோப்பையை வெற்றி பெறும் அணியாக மாற்றியதற்காக வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம், அளவில் சிறியது என்பதால் 200 ரன்களை தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. முதல் ஐந்து ஓவர்களில் ஐம்பது முதல் 60 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதினோம். அதை சரியாக செய்தோம் என்றார்.

இந்த மாதிரி ஆடத்தான் எனக்கு பிடிக்கும்
ஆட்ட நாயகன் மனிஷ் பாண்டே கூறுகையில், 200 ரன்களை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நெருக்கடியான தருணத்தில் சிறப்பாக விளையாடுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே நான் ரசித்து ஆடினேன் என்றார். தொடரில் அதிக ரன் அடித்த ராபின் உத்தப்பா கூறுகையில், எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. எனது சிறந்த ஆட்டம் ஒன்றை நானே தேர்ந்தெடுப்பது என்றால், மும்பையுடனான ஆட்டத்தைதான் தேர்ந்தெடுப்பேன். அப்போது எனது கால் விரல்கள் உடைபட்டு கடும் வலியிருந்தது. வலியை பொறுத்துக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் என்றார்.

புது நம்பிக்கை
பஞ்சாப் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார், தொடரின் அதிகபட்ச ரன் அடித்த வீரர் என்ற பெருமை கொண்ட கொல்கத்தா அணியின் உத்தப்பா 5 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் பஞ்சாப் அணியில் விருத்திமான் சாஹாவும், வோக்ராவும் சிறப்பாக ஆடி ஸ்கோர் 199ஆக உயர உதவினர். கொல்கத்தா அணியிலும் மனிஷ்பாண்டே, யூசுப் பதான் ஆகியோர்தான் அணியை 200 ரன்னை எட்டச் செய்ய உதவினர். எதிர்பார்க்கப்பட்டவர்கள் ஏமாற்றியபோதிலும், எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த ஆட்டம் ஐபிஎல் பைனலை த்ரிலிங்கிங்காக வைத்திருந்தது.


Click it and Unblock the Notifications











