ராய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட கேப் கோப்ராசுக்கு எதிரான ஆட்டத்தில் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணி வெற்றி பெற்றது.
நேற்றிரவு ராய்ப்பூரில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தின் நார்தன் டிஸ்ட்ரிக்சும், தென்ஆப்பிரிக்காவின் கேப் கோப்ராசும் மோதின. டாஸ் ஜெயித்த கேப் கோப்ராஸ் முதலில் நார்தன் அணியை பேட் செய்ய அழைத்தது.

ஆன்டன் டேவ்சிச்சும், கனே வில்லியம்சனும் நார்தன் அணியின் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக ஆடிய இவர்கள் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். இந்த ஜோடியை பிரிக்க கேப் கோப்ராஸ் கேப்டன் ஆன்டாங் 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் உடனடி பலன் கிடைக்கவில்லை. 10.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது.
ஸ்கோர் 140 ரன்களாக உயர்ந்த போது, தொடக்க ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்தது. டேவ்சிச் 67 ரன்களில் (46 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன் அவுட் ஆகி வெளியேறினார்.அடுத்து வந்த கேப்டன் டேனியல் பிளைன் டக்-அவுட் ஆனாலும், அவருக்கு பிறகு இறங்கிய வாட்லிங் அதிரடி காண்பித்தார்.
மறுமுனையில் கனே வில்லியம்சனும், கோப்ராசின் பந்து வீச்சை சின்னாபின்னமாக்கினார். வாட்லிங் 32 ரன்னிலும், ஸ்டைரிஸ், மிட்செல் ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர்.
கனே வில்லியம்சன், கடைசி ஓவரில் சிக்சர் அடித்து தனது முதலாவது சதத்தை 48 பந்துகளில் பூர்த்தி செய்தார். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் குறைந்த பந்தில் அடித்த சதம் இதுவாகும். வில்லியம்சின் சதத்தின் உதவியுடன் நார்தன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஓர் அணி 200 ரன்களை தாண்டியது இதுவே முதல் முறையாகும். வில்லியம்சன் 101 ரன்களுடன் (49 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார்.
அடுத்து ஆடிய கேப் கோப்ராஸ் அணி 7.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்த பலத்த மழை கொட்டியது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி முடிவு அறிவிக்கப்பட்டது. 7.2 ஓவரில் கேப் கோப்ராஸ் 77 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 33 ரன்கள் வித்தியாசத்தில் நார்தன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.