மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவி ஏற்று இருப்பதற்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் கம்பீர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக கொல்கத்தா அணிக்கு இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார்.
இதேபோன்று இந்தியாவுக்கு கேப்டனாக அவர் சில போட்டிகளில் தலைமை தாங்கி வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். இதேபோன்று கே கே அர் அணிக்கு வழிகாட்டியாக இருந்து ஐபிஎல் கோப்பையையும் வென்று தந்துள்ளார்.

இதனால் கம்பீர் போன்ற ஒரு ஆக்ரோஷமான பயிற்சியாளராக இருப்பது சரிதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தன்வீர் கம்பீரின் நியமனத்தை சாடி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக லட்சுமணன் தான் பதவி ஏற்றிருக்க வேண்டும்.
ஏனென்றால் லட்சுமணன் இந்திய பி அணிக்கு பலமுறை பயிற்சியாளராக வந்து தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் லட்சுமணன் இருந்து அடுத்த பயிற்சியாளராக தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்தார். ஆனால் கம்பீர் தமக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பயிற்சியாளராக வந்து அமர்ந்து விட்டார் என தன்வீர் குற்றம் சாட்டு இருக்கிறார்.
இந்திய அணிக்கு 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக வருவார் என கணிக்கப்பட்டது. ஆனால் அவர் பிசிசிஐ நடத்திய நேர்காணலில் பங்கேற்காமல் விலகியே இருந்தார். மேலும் லட்சுமணன் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி உள்ள பணியை செய்து வர ஆர்வம் காட்டி வருகிறார்.
ஒருவேளை கம்பீருக்கு ஏதேனும் ஓய்வு தேவைப்பட்டால் அப்போது மீண்டும் இந்திய பி அணியை வைத்து பயிற்சியாளராக லட்சுமணன் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட்டிலே பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அதில் கவனம் செலுத்தி விட்டு பின் இந்திய கிரிக்கெட் பக்கம் திரும்பலாம் என்றும் ரசிகர்கள் அந்த வீரருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.