மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு ரிங்கு சிங் மட்டுமல்லாமல் ருதுராஜ் கெய்க்வாய் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோரும் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20 அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவராக அஜித் அகார்கர் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய முதல் பணியாக டி20 தொடர்கான இந்திய அணியை அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறும் நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் கூட தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 14 போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங், 474 ரன்களை குவித்தும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
அதேபோல் ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பரான ஜித்தேஷ் சர்மா இறுதி ஓவர்களில் வெறியாட்டம் ஆடினார் என்றே கூறலாம். அவரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் இருவரில் ஒருவரே விக்கெட் கீப்பராக விளையாட உள்ளனர். இதில் டாப் ஆர்டரில் சுப்மன் கில் விளையாடும் பட்சத்தில், மற்றொரு தொடக்க வீரராக இஷான் கிஷன் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இஷான் கிஷனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டும் எதனையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இதனால் டி20 அணியிலாவது சஞ்சு சாம்சனுடன் சேர்த்து ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்க தேர்வு குழு முடிவு எடுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.