மும்பை : இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் வீரர்கள் உருவாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தங்களுடைய ஆட்டத்தால் கட்டி போடுவார்கள். போன தலைமுறையில் அது விராட் கோலி, ரோகித் சர்மா என இரண்டு வீரர்கள் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருந்தார்கள்.
தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி, தங்களுடைய இறுதி கிரிக்கெட் வாழ்க்கையை எட்டியுள்ள நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது. இந்திய அணியில் தற்போது ரிஷப் பண்ட், சுப்மன் கில், ரிங்கு சிங் போன்ற பல வீரர்கள் உள்ளனர்.

ஆனால் இதில் யார் சிறந்த வீரர்கள் என்பதை டெஸ்ட் கிரிக்கெட் தான் நிர்ணயம் செய்யும். ஆம் டி20, ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபிப்பதை விட டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தாங்கள் கில்லி என்பதை நிர்ணயித்தால் மட்டுமே வரலாற்று சிறப்புமிக்க வீரராக அறிய முடியும்.
நாம், கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கும் அனைத்து வீரர்களுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களாக இருப்பார்கள். அந்த சூழலில் இந்தியாவின் இளம் படை தற்போது நாங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை காட்டிக் கொள்ள தயாராக இருக்கிறது. இதில் தாங்களே வரலாற்று இடம் பிடிக்க வேண்டும் என்றால் தற்போது நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சதம் சதமாக அடித்தால் அந்தப் பெயர் அவர்களுக்கு கிடைத்து விடும்.
மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் நடப்பாண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற எந்த ஒரு வீரர் காரணமாக இருக்கிறார்களோ. அவர் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக விளங்குவார்கள். இந்த நிலையில் அந்த இடத்தை யார் பிடிப்பார் என்பது குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களிடம் அடுத்த இந்திய சூப்பர் ஸ்டார் யாராக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஸ்மித், ஜெயஸ்வால் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என தெரிவித்திருக்கிறார். இதை போல் ஸ்டார்க்கும் ஜெய்ஸ்வாலின் பெயரையே குறிப்பிட்டிருக்கிறார். மானஸ் லாபஸ்சேன், நாதன் லைன் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரும் ஜெய்ஸ்வால் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். ஜெய்ஸ்வால் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக 700 ரன்களுக்கு மேல் ஒரே தொடரில் குவித்து ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜாஸ் ஹேசல் வுட் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக கில்லை தேர்வு செய்திருக்கிறார்கள். கில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்.
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 25 போட்டிகளில் விளையாடிய கில் நான்கு சதம், 6 அரைசதம் அடித்திருக்கிறார். தன்னுடைய பெயரை நிரூபிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றார். அதற்கான வாய்ப்பு தற்போது அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.