முல்தான்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ரன் அவுட்டானது குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமான கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களும், இஃப்திகார் அஹ்மத் 71 பந்துகளில் 109 ரன்களும் விளாசினர்.

இதன்பின்னர் களமிறங்கிய நேபாளம் அணி 23.4 ஓவர்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. ஷடாப் கான் 4 விக்கெட்டுகளையும், ஷாகீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 15 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ரன் அவுட்டான விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ளது. கவர் திசையில் சாதாரணமாக தொட்டுவிட்டு ஒரு ரன் ஓடிய போது ரிஸ்வான் ரன் அவுட் செய்யப்பட்டார். ரிஸ்வான் வழக்கமாக ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய ஹெல்மெட் அணியால் விளையாடிய போது, ஒரு ரன்னை எடுக்க முயன்றார். அப்போது கவர் திசையில் இருந்த திபெந்திர சிங் வீசிய த்ரோ, ரிஸ்வானை கடந்து ஸ்டம்புகளில் அடித்து சென்றது.
திபெந்திர சிங் அடித்த த்ரோ, தன் மீது பட்டுவிடக் கூடாது என்ற அச்சம் காரணமாக முகத்தினை ரிஸ்வான் திருப்பிக் கொண்டதோடு, டைவ் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். இதுபோன்ற தருணங்களில் சாதாரணமாக டைவ் அடித்தாலே எளிதாக விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் ரிஸ்வான் ஹெட்மெட் அணியாததால், டைவும் அடிக்க முடியவில்லை. இதுகுறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ஃபீல்டர் த்ரோ வீசிய உயரம் தான் ரிஸ்வான் க்ரீஸை அடைவதற்கு பிரச்சனையாக மாறியது. ரன்களுக்கு ஓடும்போது அடிக்கடி டைவ் செய்து விக்கெட்டை காப்பாற்றும் ஒரு வீரர், கவர் திசையில் ஒரு ரன் எடுக்க ஓடிய போது ஆட்டமிழந்ததற்கு, அவர் ஹெல்மெட் அணியாததே காரணம். ஸ்பின்னர்களை ஸ்வீப் ஷாட் அடிக்க அதிகமாக விருப்பம் உள்ள ஒரு வீரர், ஹெல்மெட் அணியாமல் இருந்தது விநோதமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பலரும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்து வருகின்றனர்.