புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த தோல்வி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர் இது எங்களுடைய சிறந்த செயல்பாடு கிடையாது. குறிப்பாக தென்னாப்பிரிக்க வீரர்கள் டி காக் மற்றும் வெண்டர் டூசன் பார்ட்னர்ஷிப்பால் நாங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினோம். இது மிகப்பெரிய இலக்காக மாறியது. பேட்டிங் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றால் இதுபோன்ற பார்ட்னர்ஷிப் அமைத்தால் தான் நாம் வெற்றி பெற முடியும்.
இந்த ஆட்டத்தின் ஓரத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தள்ளிவிட்டார்கள். இந்த இரு அணி வீரர்களும் மிகப் பிரமாண்டமாக விளையாடினார்கள். தென்னாப்பிரிக்கா அணியை 330 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும். அப்படி இருந்தால் கூட எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும்.இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது.
நாங்கள் பேட்டிங் செய்யும்போது முதல் 10 ஓவர்களில் எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. தென்னாப்பிரிக்க வீரர்கள் அப்போதே ஆட்டத்தில் நல்ல நிலைமைக்கு வந்து விட்டார்கள். எங்கள் அணி வீரர்களால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. அது நிச்சயம் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. எங்கள் அணியில் பல வீரர்கள் காயமடைந்து இருக்கிறார்கள்.
அது பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. காயம் அடைந்த வீரர்கள் எவ்வளவு விரைவாக குணமடைகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இந்த தோல்வி குறித்து ஆலோசனை செய்துவிட்டு அடுத்த போட்டிக்கு நாங்கள் தயாராக வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஒரு தோல்வியால் ஒரே இரவில் நாங்கள் மோசமான அணியாக மாறிவிட மாட்டோம் என்று நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தம் கூறியுள்ளார்.