வெல்லிங்டன்: பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க நியூஸிலாந்து அணி மறுத்துள்ளது.
இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் சேர்மன் கிரெக் பார்காலே கூறுகையில், நியூஸிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் தொடரை ரத்து செய்துள்ளது. எங்களது இந்த முடிவினால் கண்டிப்பாக அவர்கள் (பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு) வருத்தமடைவார்கள் என்பது தெரியும். நியூஸிலாந்து போன்ற அணிகள் பாகிஸ்தானில் விளையாடும்போது அவர்கள் மீண்டும் சர்வதேச போட்டிகளை மீண்டும் பாகிஸ்தானில் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நாங்கள் விளையாட மறுத்ததற்கு கண்டிப்பாக அவர்கள் வருத்தமடைவார்கள். உண்மையில் அவர்கள் சிறந்தவர்கள் மற்றும் எங்களது முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் விளையாடியது அவர்களது முடிவு என்றும் விளையாட மாட்டோம் என்ற எங்களது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். ஐசிசி பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அதிக முயற்சிகள் எடுத்துவருவதாகவும் நாங்கள் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்திருப்பதாகவும்,நாங்கள் இன்னும் நியூஸிலாந்து சார்பில் எந்த அதிகாரியையும் அனுப்பி ஆய்வு செய்யவில்லை என்றும் முடிவில் கூறினார்.
தற்போது பாகிஸ்தான் அணி தனது போட்டிகளை யுனைடெட் அரபு எமிரேட்சில் நடத்துகிறது. இந்த ஆண்டு இறுதியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. ஆனால் அதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னதாக நியூஸிலாந்து கிரிக்கெட் போர்டு அதிகாரிகளை சமாதானம் செய்து விட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்கு தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இலங்கை அணியின் வீரர்கள் வந்த பேருந்தை தாக்கியதால் சில இலங்கை வீரர்கள் காயமுற்றனர். அன்று முதல் உலக அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இது கடாபி ஸ்டேடியத்தின் அருகில் நடைபெற்றது. கடந்த ஆண்டு உலக லெவன் அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகளும் கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நியூஸிலாந்து அணி கடைசியாக கடந்த 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடியது.